திருமலையில் உள்ள ஆர்.டி.சி. பேருந்து நிலையம் அருகில் தேவஸ்தானம் புதிதாக கட்டி வந்த பத்மநாப நிலையம் என்ற கட்டடம் பக்தர்களின் பயன்பாட்டுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
திருமலைக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால், தேவஸ்தானம் பக்தர்கள் இலவசமாக தங்கும் மண்டங்களை அமைத்து வருகிறது. தற்போது பக்தர்கள் தங்கும் மண்டபம்- 1, 2, 3 என பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளன. அதன் ஒரு பாகமாக இதுவரை ஸ்ரீவாரி சேவா சதன் அலுவலகமாக இருந்து வந்த பத்மநாப நிலையத்தை தேவஸ்தானம் பக்தர்களின் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை முதல் கொண்டு வந்தது. தேவஸ்தான அதிகாரிகள் இக்கட்டடத்துக்கு பூஜைகள் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
இங்கு 3 விசாலமான அரங்குகள், 816 பாதுகாப்புப் பெட்டக வசதி, படுக்கை விரிப்பு, தலையணை, எல்.ஈ.டி. தொலைக்காட்சிப் பெட்டி, மின்னணு தகவல் பலகை, குடிநீர் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக 70 குளியல் மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இங்கு தினசரி 3 வேளை சுழற்சி முறையில் 51 சுகாதாரத் துறை ஊழியர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். இக்கட்டடத்துக்கு பூஜைகள் செய்தவுடன் முதல் பாதுகாப்புப் பெட்டகத்தை பெங்களூருவைச் சேர்ந்த விஜயகுமாருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர்.