அத்திவரதர் பெருவிழாவின் எட்டு நாள் நிறைவடைந்த நிலையில் இன்று ஒன்பதாவது நாளாக அத்திவரதரை காண திரளான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர். கடந்த 7 நாள்களில் மட்டும் சுமார் 6 லட்சம் பேருக்கு மேல் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.
இந்நிலையில், கடந்து ஞாயிற்றுக்கிழமையன்று வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அத்திவரதரை காண பெரும் ஆவலுடன் வந்துள்ளனர். ஆனால், போலந்து நாட்டினருக்கு ஆகம விதிகளைக் கூறி ஞாயிற்றுக்கிழமை அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அதிருப்தியுடன் புறப்பட்டுச் சென்றனர்.
இதையடுத்து, அத்திவரதரை காண வரும் வெளிநாட்டவர்கள் அத்திவரதரை தரிசிக்க முக்கியஸ்தர்கள் வரிசையில் சிறப்பான வரவேற்புடன் அழைத்துச் செல்லப்படுவர் என ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
அத்திவரதர் பெருவிழாவில் வெளிநாட்டவர் கலந்துகொள்வது வரவேற்கத்தக்கது. ஏற்கெனவே, மதுரை மீனாட்சிஅம்மன், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வெளிநாட்டவர் தரிசனம் செய்து வருகின்றனர். அதுபோல், அத்திவரதரை தரிசனம் செய்ய வேண்டும் எனும் நம்பிக்கையுடன் வரும் வெளிநாட்டவர்கள் தாராளமாகத் தரிசனம் செய்யலாம்.
இதன்மூலம், இந்து மதம் உலகளவில் மேலும் நன்மதிப்பை பெறும். அவ்வகையில், வெளிநாட்டவர்கள் அத்திவரதரை தரிசனம் செய்யலாம் என இந்து சமய அறநிலையத்துறை உயர்அதிகாரி ஒருவரும் தெரிவித்துள்ளார்.