பழனி அடிவாரம் கிரிவீதியில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் ஏராளமான மீன்கள் இறந்து மிதந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பழனி அடிவாரம் வடக்கு கிரிவீதியில் கோயிலுக்கு சொந்தமான இடும்பன் குடில் மத்தியில் பிரம்ம தீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்தில் இதுவரை எந்த கோடைகாலத்திலும் தண்ணீர் வற்றியது கிடையாது.
இந்த புனித குளத்தில் ஏராளமான மீன்கள் உள்ளன . இந்த குளத்தில் மீன் பிடிக்க அனுமதியில்லை.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் மீன்களுக்கு இரையாக பொறிகளை போட்டுச் செல்வது வழக்கம். மேலும் குளத்தினுள் யாரும் செல்லாத வண்ணம் கம்பி வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இக்குளத்தில் ஏராளமான மீன்கள் திடீரென இறந்து மிதந்தன.
உடனடியாக கோயில் நிர்வாகம் இறந்த மீன்களை அகற்றி சுத்தப்படுத்தியது. குளம் நிறைய தண்ணீர் இருந்தும் குளத்திலிருந்த மீன்கள் இறந்ததால் பொதுமக்களும், பக்தர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
மீன்கள் இறப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம் என்றும், குளத்தில் உள்ள சில குறிப்பிட்ட ரக மீன்கள் மட்டுமே இறப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு மாற்று ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை செய்ய வேண்டும் என பொதுமக்களும், பக்தர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.