சுக்கிரனுடைய ஆதிக்கம் பெற்ற அழியா அத்தி மர சிலையில் உள்ள பெருமாள்!

ஜோதிடப்படி பார்த்தாலும் அத்தி என்பது சுக்கிரன் ஆதிக்கம் பெற்றது. ஜாதகத்தில் சுக்கிரனோடு பாவிகள்..
சுக்கிரனுடைய ஆதிக்கம் பெற்ற அழியா அத்தி மர சிலையில் உள்ள பெருமாள்!

ஜோதிடப்படி பார்த்தாலும் அத்தி என்பது சுக்கிரன் ஆதிக்கம் பெற்றது. ஜாதகத்தில் சுக்கிரனோடு பாவிகள் இனையப் பெற்றவர்கள் மற்றும் பாவிகள் பார்வை பெற்றவர்கள் இந்த தோஷம் தீவிரமாக இருக்கும். இதனால் திருமணத்தடை, திருமண தாமதம் மற்றும் சுக்கிரனோடு நெருப்பு கிரகங்கள் சேரும்பொழுது குழந்தை இன்மை ஏற்படும். 

இந்தமாதிரியான சுக்கிர தோஷம் உள்ள அனைவரும் சுக்கிரன் பலம் பெற்ற அத்தி மரம் தலவிருட்ச கோவில்கள் மற்றும் அத்தி மரச்சிலைகள் உள்ள கோவிலுக்குச் சென்று தங்கி நீராடி குளத்தில் குளித்து சுக்கிர அம்சம் பொருந்திய கடவுளைத் தரிசிக்க வேண்டும். சுக்கிரன் என்றவுடன் அத்தியின் அதீத பலத்தைக் குறிக்கும். அத்தி சுக்கிரனைப் பற்றி முன்பே என் கட்டுரையில் கூறியிருக்கிறேன். 

தமிழ்நாட்டின் பழைமையான இந்துக் கோயில்களில் அத்தி சிலைகள் ஒரு மாசு மருவில்லாத புனிதமான மரமாகக் விளங்குகிறது. அத்தி மரத்தில் கடவுள் சிலை வடிப்பதை சைவ, மற்றும் வைணவ ஆகமங்கள் அனுமதிக்கின்றன.

அத்தி மர அற்புத சக்தி அதர்வண வேதத்தில் ஒரு பகுதியில் கூறப்பட்டுள்ளது. அரிச்சந்திரன் தனக்குக் கிரீடமும் மற்றும் சிம்மாசனமும் அத்தி மரத்தில் செய்ததாகக் கூறப்படுகிறது. பழம்பெரும் காலங்களில் நம் முன்னோர்கள் அத்தி மரத்தில் தாயத்து செய்து கழுத்தில் போட்டுக்கொண்டனர். இவை அனைத்தும் ஒரு சுகபோகம் பெற என்பது ஒரு சூட்சமம். அசுர குரு சுக்கிராச்சாரியார் அத்தி மரமாக மறுபிறவி எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த அத்தி மரத்தைப் பார்த்தாலும், கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் என்று பழமொழி உண்டு. அதாவது காய்ப்பது மட்டும்தான் தெரியும். பூப்பதே தெரியாது என்பது போல சுக்ராச்சாரி மறைந்து நின்று தாக்கக்கூடியவர். அத்தியின் சுத்தி பற்றிய எடுத்துக்காட்டு நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிப்புவைக் கிழித்துக் கொன்று வதம் செய்த பின்பு, பெருமாள் அத்தி மரப்பட்டையில் நகங்களைப் பதித்துச் சுத்தப்படுத்திக் கொண்டாராம். அத்தியின் சிறப்பை சொல்லிக்கொண்டே போகலாம்.

அழியா அத்தி மர சிலையில் உள்ள பெருமாள் 

தற்பொழுது சூரியன் சுக்கிரன் புதன் அனைவரும் கடக ராசியில் பிரவேசிக்கும் காலம் வரப்போகிறது. இனி நம் மக்களுக்கு நல்லதே நடக்கும். இந்த காலகட்டத்தில் தான்  திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் அத்திவரதர் பல வருடகாலங்களுக்குப் பிறகு இங்கு உள்ள தெப்பக்குளத்தில் எழுந்தருளியுள்ளார் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பல வருட காலம் நீரில் வாசம் செய்த இந்த அத்தி வரதப்பெருமாள் என்னமாதிரி விசேஷம் என்று நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது. இங்குள்ள புராண கதைப்படி பிரம்மன் தன் யாகத்தின் நெருப்பில் பெருமாள் சிலையைப் பாதித்தது. பின்பு இதனால் பிரம்மதேவன் என்ன செய்வதறியாமல் தவித்திருந்தார். 

பெருமாளின் யோசனையின் படி, தன்னை குளிர்விக்கக் கோயிலின் சரஸ் குளத்திற்கு நடுவில் உள்ள மண்டபத்தின் அடியில் சயனத்தில் வைக்கக் கூறினார். பெருமாள் கட்டளையின்படி 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்து நீரை வெளியே இறைத்துவிட்டு பெருமாளை வெளியே எடுத்து 48 நாட்கள் சிறப்புப் பூஜைகள் செய்யப்படும் என்பது அங்குப் பின்பற்றப்படுகிறது.

சூரியனின் தாக்கம் உள்ள ஜாதகருக்கும் இங்கு உஷ்ணத்தைத் தணிக்கவே தெப்பக் குளத்தில் உள்ள தீர்த்தம் சுக்கிரனோடு பலம் பெற்றது. அதனால் தான் இங்கு வழிபடுபவர்களுக்கு முக்கியமாக கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும், சூட்டால் ஏற்படும் நோயினை அகற்ற, குழந்தைப் பேறு பெற இந்த குள தீர்த்தம் விசேஷம்.  அத்தி வரதரைப் பற்றி அனைத்து பத்திரிகைகளிலும் கூறப்பட்டுள்ளது. அதுதவிர மற்ற அத்தி மர கடவுளையும் தரிசிப்போம்.  

கோழிகுத்தி வானமுட்டிப் பெருமாள்

எங்கள் ஆன்மீக நண்பர்களுடன் மயிலாடுதுறை செல்லும்பொழுது இந்த 15 அடி அழகான உயரமான அத்தி பெருமாளைத் தரிசித்தோம்.  நாங்கள் செல்லும்பொழுது கோவிலுக்கான திருப்பணிகள் கட்டும் நேரம். அவர் கைகளில் சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் ஏந்தி மார்பில் மகாலட்சுமி விளங்கச் சேவை சாதிக்கிறார். பெருமாள் விஸ்வரூபமாக இருந்தார். குடகுமலை அரசன் தன் பாவங்களால் ஏற்பட்ட குட்ட நோயினை இந்த ஆலயத்தில் உள்ள மகரிஷி தீர்த்தத்தில் குளித்து வானமுட்டிப் அத்தி பெருமாளைத் தரிசித்து, பாவ விமோசனம் பெற்றார். கோடி பாவம் தொலைந்த காரணத்தால் இவ்வூர் கோடி ஹத்தி என்று பெயர் பெற்றது. அதுவே இன்று கோழிகுத்தி பெருமாள் என்று மறுவியது. தன் நோயும், வினையும் நீங்கிய மன்னன் மனமகிழ்ந்தார். அத்தி மரத்தால் செய்வித்த ஸ்ரீனிவாசப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இன்னும் பல பாவ விமோசன கதைகள் இங்குக் கூறப்படுகிறது.

புதன் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் இங்கு நீராடினால் சரும நோய்கள் விலகும், வினைகள் தொலையும் என்பது நம்பிக்கை. சுகாதிபதி சுக்கிரனால் மற்றும் கர்ம காரகன் சனீஸ்வரனால் பீடிக்கப்பட்டவர்கள் இங்கு விமோசனம் அடைந்துவிடுவார்கள் என்பது ஐதீகம்.

செங்கழுநீர் அம்மன் கோவில்
 
இந்த பழமையான அத்தி மர செங்கழுநீர் அம்மன் கோவில்: வீராம்பட்டினம் கிராமம், புதுச்சேரியில் உள்ளது.  இவற்றிற்கும் ஒரு கதை உள்ளது வீரராகவர் என்ற மீனவர் செங்கழுநீர் ஓடைக்குச் சென்று மீன் பிடிப்பதற்காக வலையை வீசினார். அப்பொழுது உருண்டையான மரக்கட்டை கிட்டியது. அவற்றை வெட்டும் பொழுது ரத்தம் வந்ததாகவும் கூறப்படுகிறது. அன்றே அவர் கனவில் அம்மன் தோன்றி அவரிடம் "பக்தனே, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தெய்வீகம் பெற்ற பராசக்தியின் அம்சம் நான். 

இந்த பகுதி மக்கள் செய்த தவத்தின் பயனாக இங்குக் கோயில் கொண்டு அருள் வழங்க வந்துள்ளேன். என் வருகையின் அடையாளமே, உன்னிடம் உள்ள அத்தி மரத்துண்டு. எனவே நான் குறிப்பிடும் இடத்தில் அந்த மரத்துண்டைப் பீடமாக ஸ்தாபித்து, அதன்மேல் என் திருவுருவை விக்கிரகமாகப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, மேலும் என்னைச் செங்கழுநீர் அம்மன் என்று அழையுங்கள்” என்று கூறிவிட்டு அன்னை மறைந்தாள். பிறகு அந்த கோவில் சிறப்புற விழாக்கள் நடைபெறுகிறது. இங்கு ஆடி மாதம்  வெள்ளிக்கிழமைகள் தொடர்ச்சியாக வீராம்பட்டினமே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் முதலே கவர்னர் தேர் திருவிழாவில் கலந்துகொண்டு தேரின் வடம் பிடித்துத் தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தார் என்று கூறப்படுகிறது. கடலில் பெற்றதால் சுக்கிரன், சந்திரன் தோஷம் உள்ளவர்கள் இந்த கடவுளை வணங்கலாம். இந்த அம்மன் எல்லாவளமும் தருபவளாக அத்தியில் அமர்ந்து இருக்கிறாள்.

திருமலையில் திருப்பதி தல தீர்த்தமாகிய குளத்திலும் அத்தி பெருமாளாகவும் மற்றும் உடுப்பியில் கிருஷ்ணன் அத்தி சிலையாகவும் வழிபட்டு வருகின்றனர். அத்தி மரம் அடியில் அல்லது மரப் பலகையில் உட்கார்ந்து தியானம் செய்தால் பூமியினுடைய புவி ஈர்ப்பு விசை நம்மை அதிகம் தாக்காமல் எந்த மந்திரத்தை உச்சரிக்கிறோமே அந்த மந்திரத்தினுடைய பலன் முழுமையாகக் கிடைக்கும். 

இதுபோன்ற அபார சக்தியும் திருவொற்றியூர், திருக்கானாட்டு முள்ளூர் ஆகிய திருக்கோயில்களில் 2வது தலவிருட்சமாக அத்திமரம் வணங்கப்படுகிறது. சுக்கிரனுக்கு உரிய அத்தி மரத்தின் வேர் பட்டை, இலை, காய், பழம் என அனைத்துமே மனிதன் நலமாக வாழ்வதற்குத் தேவையான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. அதனால் தான் அத்தியின் நீர் நமக்குப் பிரசாதமாகிறது.

- ஜோதிட சிரோன்மணி பார்வதி தேவி, சென்னை

தொலைபேசி: 8939115647

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com