மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் பிறந்தநாளை முன்னிட்டு 4 நாள் சிறப்பு கண் சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மேல்மருவத்தூர் சித்தர்பீட நிறுவனர் பங்காரு அடிகளாரின் 79-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இலவச கண்சிகிச்சை சிறப்பு முகாமை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க அன்னதானக் கூடத்தில் பங்காரு அடிகளார் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர், முகாமின் அனைத்து பகுதிகளையும், நோயாளிகளையும் பங்காரு அடிகளார் பார்வையிட்டார். இதில், மேல்மருவத்தூர், கயப்பாக்கம், மதுராந்தகம், எண்டத்தூர், ஒலக்கூர், கயப்பாக்கம், பொலம்பாக்கம், மொறப்பாக்கம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளானோர் வந்து கண் நோய்க்கு சிகிச்சை பெற்றனர்.
இந்த 4 நாள் முகாமில் திங்கள்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா முன்னிலையில் பங்காரு அடிகளார் இலவச மூக்கு கண்ணாடிகளை வழங்குகிறார் என்று ஆதிபராசக்தி மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். முகாமில், ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மோமன்சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.