திருமலையில் பெருமாள் சேவையில் ஈடுபடும் சேவார்த்திகள் தங்குவதற்காக ரூ.96 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீவாரி சேவா சதன் கட்டடத்தை தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுதாகர் யாதவ் திறந்து வைத்தார்.
ஏழுமலையான் சேவையில் பக்தர்களை ஈடுபடுத்தும் ஸ்ரீவாரி சேவா என்ற திட்டம் திருமலையில் கடந்த 2000- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 195 சேவார்த்திகளுடன் இத்திட்டம் தொடங்கியது. தற்போது தினமும் 1,500 சேவார்த்திகளும், உற்சவ நாள்களில் 3,000 ஸ்ரீவாரி சேவார்த்திகளும் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அவர்கள் தங்க திருமலையில் ஒருங்கிணைந்த கூடம் இல்லை. அதனால் அவர்களின் வசதிக்காக திருமலையில் கல்யாண மண்டபத்தின் பின்னால் ஸ்ரீவாரி சேவா சதன் என்ற கட்டடத்தை தேவஸ்தானம் கட்டியுள்ளது.
இதை தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுதாகர் யாதவ் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று திறந்து வைத்தார்.