மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் மாசி மக விழாவையொட்டி நகர கடற்கரையில் பெருமாளுக்கு தீர்த்தவாரி உற்சவம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.
மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் மாசி மக விழாவையொட்டி ஆண்டுதோறும் கடலில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை மாசி மகத்தையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி கடற்கரைக்கு வந்தார். அப்போது சக்கரத்தாழ்வார் பல்லக்கில் ஊர்வலமாக வந்தனர். கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் வீற்றிருக்க, சக்கரத்தாழ்வாருக்கு கடலில் புனித நீராட்டு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் இறங்கி நீராடினர்.
பெருமாளுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் கடற்கரையில் அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள், மகாதீபாராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து கருடாழ்வார் மீது பெருமாளும், பல்லக்கில் சக்கரத்தாழ்வாரும் மாட வீதிகள் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தார். பெருமாள் கருட சேவையையும் சக்கரத்தாழ்வாரையும் பக்தர்கள் வீதிதோறும் நின்று பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் சுவாமி கோயிலை வந்தடைந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.