செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள்கோவிலில் அமைந்துள்ள பாடலாத்ரி நரசிம்மப் பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் ராஜகோபுரப் பணியின் நுழைவுவாயிலை அமைக்கும் வாசக்கால் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கப்பெருமாள்கோவிலில் உள்ள மிகப் பழைமை வாய்ந்த, ஒரே கல்லில் குடையப்பட்ட முக்கண்ணுடன் காணப்படும் பெருமாள் வீற்றிருக்கும் பாடலாத்ரி நரசிம்மர் கோயிலில் இது வரை ராஜகோபுரம் இல்லை. எனவே, ராஜகோபுரம் கட்டும் பணி கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்றது.
இந்நிலையில், கோபுரத்துக்கு கருங்கல்லால் வாசக்கால் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி பாடலாத்ரி நரசிம்மப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், கோயிலில் யாகசாலை பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோயிலில் இருந்து வாசக்கால் வைப்பதற்காக பூஜைப் பொருள்களுடன் ராஜகோபுரப் பணி நடைபெறும் இடத்துக்கு அர்ச்சகர்கள் ஊர்வலமாக வந்தனர். அங்கு கருங்கல் வாசக்காலுக்கு அவர்கள் மஞ்சள், குங்குமம், புஷ்பமிட்டு பூஜைகளை நடத்தினர். அதன்பின் ராஜகோபுர நுழைவு வாயிலில் வாசக்கால் நிறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சிவசண்முகப் பொன்மணி, சிவப்பிரகாசம் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள், ராஜகோபுரக் குழுவினர், பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர்.