காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு நன்கொடை வழங்குபவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை அக்கோயில் நிர்வாகம் திங்கள்கிழமை நடைமுறைப்படுத்தியது.
ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், இக்கோயில் நிர்வாகம் நாள்தோறும் செயல்படுத்தும் அன்னதானத் திட்டத்துக்கு நன்கொடைகளை அளித்து வருகின்றனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் ரசீது வழங்குகிறது. திருப்பதி தேவஸ்தானம் நன்கொடையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவது போல் காளஹஸ்தி கோயில் நிர்வாகமும் வழங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், காளஹஸ்தீஸ்வரர் கோயில் அன்னதான திட்டத்துக்கு காளஹஸ்தி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சுப்ரமணியம், ராதிகா தம்பதியர்
ரூ.1 கோடியே, 11 லட்சத்து, 11 ஆயிரத்து, 112-ஐ நன்கொடையாக வழங்கினர். அவர்களுக்கு நன்கொடைக்கான ரசீதுடன் கோயில் முத்திரை அச்சிடப்பட்ட அட்டையையும் அதிகாரிகள் வழங்கினர்.
முன்னாள் எம்எல்ஏ தம்பதியை தட்சிணாமூர்த்தி சந்நிதியில் அமர வைத்து வேத ஆசீர்வாதம் செய்வித்து, காளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசூனாம்பிகை வஸ்திரங்கள், பிரசாதம், உருவப்படம் உள்ளிட்டவற்றை வழங்கினர். அவர்கள் இனி கோயில் நன்கொடையாளர்களின் பட்டியலில் சேர்க்கப்படுவதுடன் தரிசனம் உள்ளிட்டவற்றில் சலுகைகளை வழங்க உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.