திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவின் 2-ஆம் நாளான திங்கள்கிழமை சுவாமி குமரவிடங்கப்பெருமான் சிங்கக் கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்மன் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.
இக்கோயிலில் மாசித்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமியும், அம்மனும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.
திங்கள்கிழமை காலை சுவாமி குமரவிடங்கப்பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்மன் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி, அருள்மிகு தூண்டுகை விநாயகர் கோயில் அருகேயுள்ள ஆழ்வார்திருநகரி ஆண்டியப்ப பிள்ளை மண்டபத்தில் சேர்ந்தனர்.
தொடர்ந்து, அம்மன் மட்டும் 8 வீதிகளிலும் உலா வந்து மண்டபம் சேர்ந்தார். இரவு மண்டபத்திலிருந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி சுவாமி சிங்கக் கேடய சப்பரத்திலும், அம்மன் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோயில் சேர்ந்தனர்.
மாசித்திருவிழா 3-ஆம் நாள்: மாசித்திருவிழாவின் 3-ம் நாளான செவ்வாய்க்கிழமை காலை மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் பூங்கோயில் சப்பரத்திலும், தெய்வானை அம்மன் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோயில் சேருகின்றனர். மாலையில், மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.
விழா ஏற்பாடுகளை தக்கார் இரா. கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பா. பாரதி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.