திருப்பதியில் உள்ள தேவஸ்தான மாவு மில்லில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அச்சத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.
திருப்பதியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான மாவு மில் கிடங்கு உள்ளது. இங்கு லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படும் கடலை பருப்பு, இதர பிரசாதங்கள் தயாரிக்கப் பயன்படும் அரிசி, கோதுமை உள்ளிட்டவை அரைக்கப்பட்டு மாவாக்கப்படுகின்றன. இவற்றை பத்திரமாக நிலுவையில் வைக்க குளிர்சாதன வசதி கொண்ட அறைகள் உள்ளன. இந்த மில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் பாம்புகள் நடமாடுவது வழக்கம்.
தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால், பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சேஷாசல வனப்பகுதி என்றாலே பாம்புகளின் கூடாரம் எனக் கூறப்படுகிறது. அதனால் பலவகையான பாம்புகள் இரவு வேளைகளில் மட்டுமல்லாமல் பகலிலும் தற்போது நடமாடத் தொடங்கியுள்ளன. இதனால் ஊழியர்கள் பயத்துடன் அங்கு பணிபுரிந்து வருகின்றனர்.
எனவே, தேவஸ்தானம் இப்பகுதியில் பாம்புகள் வருவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.