அத்திவரதர் எழுந்தருளிய அனந்தசரஸ் திருக்குளத்தில் உள்ள நடவாவிக் கிணற்றில் பெருமாளை வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த வழித்தடத்தில் இருந்த மணல் மூட்டைகளை அப்புறப்படுத்தும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா கடந்த 17-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. விழா நிறைவு பெற்றதையடுத்து அத்திவரதரை அனந்தசரஸ் திருக்குளத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
திருக்குளத்தின் கரையிலிருந்து குளத்தில் உள்ள நடவாவிக் கிணறு வரை மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக பாதை அமைக்கப்பட்டிருந்தது.
சனிக்கிழமை இரவு பெருமாள் திருக்குளத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நிறைவடைந்ததால் பாதையில் அமைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
தொடர் மழை காரணமாக அனந்தசரஸ் திருக்குளம் திங்கள்கிழமை காலை வரை 2 அடி உயரம் அளவுக்கு நிரம்பியிருந்தது.
திருக்குளத்தைப் பார்வையிட அனுமதிக்க பக்தர்கள் கோரிக்கை: அத்திவரதர் பெருவிழா 48 நாள்கள் ஒருகோடிக்கும் அதிகமான பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசித்துச் சென்றனர். திருக்குளத்தில் பெருமாள் வைக்கப்பட்ட பிறகு பக்தர்கள் பலரும் கோயிலுக்கு வந்து அனந்தசரஸ் திருக்குளத்தைப் பார்வையிட வருகின்றனர்.
ஆனால் பெருமாள் வைக்கப்பட்டுள்ள திருக்குளத்தை பக்தர்கள் பார்வையிட காவல்துறையினர் அனுமதிப்பதில்லை. இதனால் பக்தர்கள் அதிருப்தியுடன் செல்கின்றனர்.
அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள திருக்குளத்தை பார்வையிட பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.