அத்திவரதர் சனிக்கிழமை எழுந்தருள உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தினையும், பெருமாளின் திருமேனி வைக்கப்படவுள்ள நடவாவி கிணற்றையும் உயர்நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட இந்துசமய அறநிலையத்துறை வழக்குரைஞர் மகாராஜா,அரசு வழக்குரைஞர் கார்த்திகேயன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வழக்குரைஞர் புருஷோத்தமன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
குளத்தில் உள்ள தண்ணீர் சுத்தமானதாக இருக்கிறதா எனவும் கோயில் வளாகத்தில் உள்ள 5 வெவ்வேறு இடங்களில் நீரை பரிசோதித்து மாதிரிகள் எடுத்துக் கொண்டனர்.
பெருமாள் திருமேனி வைக்கப்படவுள்ள நடவாவி கிணற்றுப் பகுதியையும், அனந்தசரஸ் திருக்குளத்திலும் செய்ய வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்து ஏ.டி.ஜி.பி.ஜெயந்த் முரளி, வடக்கு மண்டல ஐ.ஜி. எஸ்.நாகராஜ் மற்றும் குளம் பாதுகாப்புக்கான எஸ்.பி.ஜெயக்குமார் ஆகியோரும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அனந்தசரஸ் திருக்குளத்தில் தொடர்ந்து செய்யப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், டிஜிபி ஜே.கே.திரிபாதி ஆகியோர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர். முன்னதாக அனைவரும் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.