கலசப்பாக்கத்தை அடுத்த காப்பலூர் ஊராட்சியில் அமைக்கப்பட்ட 42 அடி உயர வீர ஆஞ்சநேயர் சிலைக்கு திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காப்பலூர் ஊராட்சியில் மிகவும் பழைமை வாய்ந்த பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயில் அருகே 42 அடி உயரத்தில் அபயவரத ஸ்ரீ வீரஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை முதல்கால பூஜை, கணபதி ஹோமம், தீபாராதனை நடைபெற்றது. திங்கள்கிழமை காலை 6 மணிக்கு 2-ஆம் கால பூஜை நடைபெற்று 10 மணிக்கு மேல் சிலைக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்வித்தனர்.
இதில் காப்பலூர், கலசப்பக்கம், காங்கயேனூர், வசூர், குருவிமலை, விண்ணுவாம்பட்டு என காப்பலூர் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.