திருவானைக்கா அருள்மிகு சம்புகேசுவரர் உடனுறை அகிலாண்டேசுவரி அம்மன் திருக்கோயில் பங்குனித் தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இத்திருக்கோயில் பங்குனித் திருவிழாவுக்கான பெரிய கொடியேற்றம் மார்ச் 14-ம் தேதியும், எட்டுத்திக்கு கொடியேற்றம் 31-ம் தேதியும் நடைபெற்றது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்மன் வாகனங்களில் புறப்பாடாகி வீதியுலா வருதல் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமையான இன்று காலை 6.50 மணிக்கு நடைபெற்றது. முதலில் சுவாமி தேர், தொடர்ந்து அம்மன் தேர் வடம்பிடிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரரின் சிறிய தேர்வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.