கே.சி.எஸ் ஐயர் கணித்த தமிழ் புத்தாண்டுப் பலன்கள் - 2019 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)

2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டின் முதல் நான்கு (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்) ராசிகளுக்கான
கே.சி.எஸ் ஐயர் கணித்த தமிழ் புத்தாண்டுப் பலன்கள் - 2019 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)

2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டின் முதல் நான்கு (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்) ராசிகளுக்கான பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் தேவையான பணம் வந்து கொண்டே இருக்கும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு என்று எதுவும் ஏற்படாது. அவசரமாக முடிக்க வேண்டிய காரியங்களையும் தொடர் வேலைகளுக்கிடையே செய்து முடித்து வெற்றியடைவீர்கள். உடற்பயிற்சி செய்வதில் அக்கறை அவசியம். 

அக்கம்பக்கத்தில் பெருமையுடன் பேசப்படுவீர்கள். மற்றவர்களுக்கு பயன்படும் படியான பொதுத் தொண்டுகளில் ஈடுபடுவீர்கள். தானதர்மங்களிலும் உங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள். சிலருக்கு புதிய நிலம், வீடு, வாங்கும் யோகம் உண்டாகும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். செய்தொழிலில் எடுத்த வேலைகள் அனைத்தும் சீராய் முடியும்.

புதிய வாய்ப்புகளும் தேடி வரும். சமுதாயத்தில் நல்ல பெயரெடுப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பை சுலபமாகப் பெறுவீர்கள்.  திறமைகளைக் கொண்டு புதிய சாதனைகளைப் படைப்பீர்கள். செயல்களில் நியாயத்தையும் கடைபிடிப்பீர்கள். நேர்மறையாக சிந்தித்து காரியமாற்றும் காலகட்டமாக இது அமைகிறது.

ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எதிரிகளை வாக்கு சாதுர்யத்தினால் நயமாகப் பேசி வென்றுவிடுவீர்கள். முகத்தில் புதுப் பொலிவு உண்டாகும். நடையிலும் மிடுக்கு உண்டாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் சிறப்பான அபிவிருத்தியையும் பெறுவீர்கள். 

புதிய முன்னேற்றப் பாதையில் பயணப்படத் தொடங்குவீர்கள். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அவர்களுக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆமை வேகத்தில் நடந்த செயல்கள் அனைத்தும் துரித வேகத்தில் நடக்கத் தொடங்கும். பழையக் கடன்களை முழுவதுமாகத் திருப்பி அடைத்து விடுவீர்கள். 

குடும்பத்தில் அனைத்தும் நிறைந்து குறையொன்றுமில்லை என்கிற அளவுக்கு மகிழ்ச்சி நிலவும். எதிரிகளும் போட்டியாளர்களும் மறைந்து விடுவார்கள். செய்தொழிலை வேறு ஊர்களுக்கும் சென்று விரிவுபடுத்துவீர்கள். அன்னையின் அன்பும் பாசமும் கிடைக்கும். அந்த வழியில் பூர்வீகச் சொத்துகளும் வந்து சேரும். பெற்றோருடன் இணக்கமாக வாழும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உன்னதமான பதவிகளைப் பெறுவார்கள். உங்களுக்கு எதிராக சதி செய்தவர்கள் அடங்கி விடுவார்கள். வருமானம் பலமடங்கு உயரும். இதனால் குடும்பத்தின் தேவைகளை சுலபமாக நிறைவேற்றிக் கொள்வீர்கள். அலுவலகத்தில் சில முக்கிய அதிகாரிகள் உங்களுக்கு கருணை காட்டுவார்கள். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப் படுவார்கள். திறமைகளை வளர்த்துக்கொள்ள  தேவையான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். 

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக முடியும். கூட்டாளிகள் நட்புடன் பழகுவார்கள். அவர்களுடனான பழைய பிணக்குகளை மறந்து விடவும். அரசு வகையில் சிரமங்கள் ஏதும் வராது. விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் கிடைக்கும். விளைச்சலில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். உற்சாகமாக பணியாற்றுவீர்கள். கரும்பு பயிர் செய்பவர்கள் நல்ல வருமானத்தைக் காண்பார்கள். பழைய கடன்களிலிருந்து விடுபடுவீர்கள். எதிலும் விழிப்புடன் இருங்கள். 

அரசியல்வாதிகளுக்கு இந்த விகாரி ஆண்டில்  சில எதிர்ப்புகள் தோன்றினாலும் கௌரவத்திற்கு  அதனால் பங்கம் ஏதும் வராது. எவரிடமும் ரகசியங்களைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். தொண்டர்களிடம் உங்கள் பேச்சுக்கு வரவேற்பு இருக்கும். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர் உற்சாகமான நிலையுடன் பணியாற்றுவீர்கள். பழைய ஒப்பந்தங்களை நன்றாக முடித்துக்கொடுத்து புதிய ஒப்பந்தங்களை பெறுவீர்கள். 

கைநழுவிப்போன வாய்ப்புகள் திரும்பக் கிடைக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.  உழைப்புக்கேற்ற வருமானம் தொடர்ந்து கிடைக்கும். புதிய முயற்சிகளில் கவனத்துடன் ஈடுபடவும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராக இருக்கும். குடும்ப உறவினர்களிடம் உறவு நல்ல முறையில் இருக்கும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உணவு விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். தெய்வ வழிபாட்டைக் கூட்டிக்கொண்டு ஆத்ம பலம் பெறுங்கள். 

மாணவமணிகள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். நல்ல மதிப்பெண்களையும் பெறுவீர்கள். விரும்பிய பாடங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நண்பர்களுடன் சிறுசிறு சலசலப்புகள் தோன்றினாலும் அவைகளால் பெறிய பாதிப்புகள் உண்டாகாது. 

பரிகாரம்: "ஜய ஜய துர்க்கா' என்று ஜபித்து துர்க்கையை வழிபடவும்.

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பல துறைகளில் நுழைந்து வெற்றி பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வீர்கள். செய்தொழிலில் படிப்படியாக முன்னேறி இலக்குகளை எட்டி விடுவீர்கள். அனைத்து விஷயங்களிலும் உஷாராகவே இருப்பீர்கள். பொருளாதாரத்தில் இருந்த சரிவுகள் அகன்று நிலைமை சீரடைந்துவிடும்.  

உடலாரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். எண்ணங்கள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றாரும் மற்றவர்களும் போற்றத்தகுந்த உயர்ந்த நிலையில் நின்று மகிழ்ச்சி கடலில் மிதப்பீர்கள். திருமணமாகாதவர்களுக்குத் திருமணமும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் உண்டாகும்.  

சிலர் புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வார்கள். தெய்வ காரியங்களிலும் மத சம்பந்தமான சடங்குகளிலும் தர்ம காரியங்களிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். அரசாங்க ஆதரவு நன்றாக கிடைக்கும். இக்கட்டான தருணங்களில் சமயோசித புத்தியைப் பயன்படுத்தி தப்பித்துக் கொள்வீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் ஆதரவும் நட்பும் கிடைக்கும்.  

ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செய்தொழில் எந்தவித சிக்கலுமின்றி நன்றாகவே நடக்கும். போதிய அளவுக்கு பணநடமாட்டம் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பெற்றோர்களின் ஆதரவும் நிரம்பக் கிடைக்கும்.  கடினமான விஷயங்களிலும் மனஉறுதியுடன் தாக்குப்பிடித்து வெற்றி பெற்று விடுவீர்கள்.  

அரசாங்க ஆதரவும் அரசியல்வாதிகளின் பக்கபலமும் தொடர்ந்து நீடிக்கும். முடியாத காரியமென்று எதுவும் இருக்காது என்ற அளவுக்கு காரியமாற்றுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.  இல்லத்தில் திருமணம் மூலம் புதிய உறவினர்களும் கிடைப்பார்கள். உறவினர்கள் மத்தியில்  உங்கள் அந்தஸ்து உயரும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களால் சிறு தொல்லைகள் ஏற்படலாம். 

சில பொருள்கள் திருட்டுப் போகலாம். அதனால் கவனம் தேவை. பழைய காலத்தில் அரிய சந்தர்ப்பங்களைக் கோட்டை விட்ட நீங்கள் புதிய சந்தர்ப்பங்களைப் பெறுவீர்கள். எதிரிகளையும் போட்டியாளர்களையும் அரவணைத்துச் செல்வீர்கள்.  பழைய வழக்கு விவகாரங்களில் விட்டுக்கொடுத்து சமரசமாகச் சென்று முடித்துக் கொண்டுவிடும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு குறையும். மேலதிகாரிகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். உங்கள் வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்தால் குழப்பங்களிலிருந்து தப்பிக்கலாம். பொருளாதார நிலைமை மேம்படும். பேச்சில் வேகம் வேண்டாம். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும்.  வியாபாரிகள் பழைய காலத்தை விட வியாபாரத்தில் வளர்ச்சியைக் காண்பார்கள். திறமையை வளர்த்துக்கொள்வீர்கள். 

புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் சிறப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட வழக்குகள் சாதகமாகும். கூட்டுத்தொழிலில்  இருப்பவர்கள் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். விவசாயிகள் ஆதாயங்கள் பெற கடினமாக உழைக்க வேண்டி வரும். சந்தையில் அதிக போட்டிகளைச் சந்திக்க நேரிடும். கால்நடைகளாலும்  பால் வியாபாரத்தினாலும்  பலன் அடைவீர்கள்.

அரசியல்வாதிகள் சிறப்புகளைப் பெறுவார்கள். தொண்டர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். முயற்சிகள் அனைத்தும் பலன் தரும். சமூகத்தில் மதிப்பு மரியாதைகள் உயரும். உட்கட்சிப் பூசலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். மாற்றுக் கட்சியினரிடமும் அனுசரித்து நடந்துகொள்ளவும். கலைத்துறையினருக்கு புதிய லாபங்கள் கிடைக்கும். அதன் மூலம் பெயரும் புகழும் பெறுவீர்கள். துறையில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். சமுதாயப் பணிசெய்து உங்கள் பெயரை மேலும் உயர்த்திக் கொள்வீர்கள். 

பெண்மணிகள் புதிய ஆடை அணிமணிகளை வாங்குவீர்கள். குடும்பத்தில் பிரிந்து இருந்தவர்கள் இணையும் வாய்ப்பு உண்டாகும். இல்லத்தில் இருந்த பிரச்னைகள் அகலும். உற்றார் உறவினர்கள் உங்கள் காரியங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அந்த பாக்கியத்தைப் பெறும் காலகட்டமிது. 

மாணவமணிகள் தினமும் நன்றாகப் படித்து தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவார்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பேச்சைக் கேட்டு நடப்பீர்கள். எளிமையான உடற்பயிற்சிகளை செய்வது நல்லது.

பரிகாரம்: கோளறு பதிகம் படித்து சிவபெருமானையும் விநாயகர் அகவல் படித்து விநாயகரையும் வழிபடவும். 

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் பலமான ஓர் அஸ்திவாரம் ஏற்பட்டுவிடும். தற்காலிக வாய்ப்புகள் நிரந்தரமாகிவிடும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உடன்பிறந்தோரும் அனுசரித்து நடந்துகொள்வார்கள். 

பொருளாதார நிலைமை உயர்ந்து காணப்படும். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் மறுபடியும் குடும்பத்துடன் சேர்வார்கள். சிலர் தம் வசமுள்ள விலையுயர்ந்த பொருள்களை விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டு புதிய நிலம், வீடு வாங்கவும் வாய்ப்புண்டாகும். அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல ஆதாயமும் அனுகூலமும் வந்து சேரும்.

கடந்த காலத்தில் உழைப்புக்குக் கிடைக்காத மதிப்பும் வசதியும் இந்த காலத்தில் உயரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சகஜமான நிலை உண்டாகும். திருமண வயதைத் தாண்டியும்  திருமணமாகாமல் தடுமாறிக் கொண்டிருந்தவர்களுக்குத் திருமணப் பிராப்தம் கூடி வரும். 

எதிரிகளின் தொல்லைகளுக்கு ஆட்பட்டிருந்தவர்கள் அதிலிருந்து மீண்டு வருவார்கள். தொடர்ந்த உடலுபாதைகளால் மனச்சஞ்சலம் அடைந்திருந்தவர்கள் முழுமையாக தேக ஆரோக்கியத்தைப் பெற்று மகிழ்ச்சியடைவார்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்தாலும் அவர்களைத் திருப்திப்படுத்த முடியாமல் போகும் காலகட்டமாக இது அமைகிறது.

ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செய்தொழில் வர்த்தகம் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணமுடை என்கிற பேச்சுக்கே இடமிராது. தீவிர முயற்சியின் பேரில் புதிய கடன் பெற்று புது வீடு கட்டவும் சந்தர்ப்பம் கிட்டும். வெளியிலிருந்து வரவேண்டிய பணமும் கைவந்து சேரும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைத்து அவர்களின் சிபாரிசின் பேரில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.

குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர், வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.  எதிரிகளின் சூழ்ச்சிகளை முன்னதாகவே அறிந்து அதற்கான தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள். புகழ், கீர்த்தி, செல்வாக்கு, கௌரவம் யாவும் மேன்மேலும் அதிகரிக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் அனைத்தும் சுமுகமாகவே முடிவடையும். உடலில் இருந்த சோர்வுகள் நீங்கி உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். உங்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். இதனால் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பணவரவும் நன்றாக இருக்கும். காலநேரங்களை வீணாக்காமல் பயன்படுத்திக் கொள்ளவும். வியாபாரிகளுக்கு சற்று கூடுதலான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்களில் அதிகமான லாபங்களைக் காண்பீர்கள். 

சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். பழையக் கடன்களைத் திருப்பி அடைப்பீர்கள். கூட்டாளிகளிடமும் நண்பர்களிடமும் கலந்தாலோசித்தப்பிறகே அனைத்து செயல்களையும் நிறைவேற்றவும். விவசாயிகளுக்கு தோட்டம், தோப்பு உள்ளிட்ட விவசாயப் பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். விளைச்சல் நன்றாக இருக்கும். 

இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்துவீர்கள். புதிய முயற்சிகளில் துணிந்து ஈடுபடலாம். கால்நடைகளாலும் நல்ல பலன் கிடைக்கும். பாசனம் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தவும். குத்தகை வருவாயும் தானிய விற்பனையும் நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். தொண்டர்களை உற்சாகப் படுத்துவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் பயணங்கள் மேற்கொள்வீர்கள். கலைத்துறையினர் கடமையை உணர்ந்து செயல்படுவீர்கள். உங்கள் செயல்களுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும்.

அதிக முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். ரசிகர்களின் ஆதரவு மழையில் நனைவீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். உற்றார் உறவினர்கள் உங்கள் பேச்சைக் குறை கூறுவார்கள். 

குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். மாணவமணிகள் நீண்ட கால திட்டங்கள் தீட்ட இது உகந்த நேரம். கிரிக்கெட் போன்ற வெளிவிளையாட்டுகளில் ஈடுபடலாம்.  நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும்.  போதிய பயிற்சிகளை மேற்கொண்டு நிறைய மதிப்பெண்களை அள்ளுவீர்கள். 

பரிகாரம்: பார்வதி, பரமேஸ்வரரை வழிபடவும். பிரதோஷ காலங்களில் ரிஷபாரூடரை தரிசிக்கவும்.

{pagination-pagination}

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் பிரச்னைகள் அனைத்தும் நீங்கி அமைதி பூத்துக்குலுங்கும். முகத்தில் புதுப்பொலிவும் நடையில் மிடுக்கும் உண்டாகும். தைரியமாக முயற்சிகளைச் செயல்படுத்த துவங்குவீர்கள். மனதில் இருந்த சஞ்சலங்களும் குழப்பங்களும் நீங்கி தெளிவு உண்டாகும். 

பெற்றோர்களின் ஆதரவு சிறப்பாகக் கிடைக்கும். குடும்பத்தில் சுமுகமான பாகப் பிரிவினைகள் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளின் மூலமும்  வருமானம் வரத்தொடங்கும். தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் அனைத்தும் இனி நிச்சயமாக நடக்கும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். சிலர் பழைய வாகனத்தை விற்று புதிய வாகனத்தை வாங்குவார்கள். நெடுநாளாக விற்காமல் இருந்த சொத்துகளை விற்று அதன் மூலம் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள்.

 உடன்பிறந்தோரிடம் தாமரை இலைத் தண்ணீர் போல் பழக வேண்டுமே தவிர நெருங்கிப் பழகுவதைத் தவிர்ப்பது நல்லதாகும். வங்கியில் அடமானம் வைத்திருக்கும் நகைகளை மீட்டு விடுவீர்கள். கடந்த காலத்தில் உழைப்புக்குக் கிடைக்காத மதிப்பும்  மரியாதையும் இந்த காலகட்டத்தில் கிடைக்கும். 

ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செயற்கரிய காரியங்கள் பலவற்றைச் செய்து அதன்மூலம் சமுதாயத்தில் பெரும் புகழ் அடைவீர்கள். அரசு அதிகாரிகளிடம் உங்கள் செல்வாக்கு உயர்ந்து புதிய சலுகைகளையும் பெறுவீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களையும் வாங்குவீர்கள். குடும்ப நிர்வாகமும் மகிழ்ச்சிக்குரியதாகவே இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களும், குழந்தைப்பேறும் உண்டாகும்.  

உங்களை குற்றம் குறை கூறிக்கொண்டிருந்தவர்கள் புகழத் தொடங்குவார்கள். எதிர்காலத்தில் சற்று தலைநிமிர்ந்து நடப்பதற்கான வசதி வாய்ப்புகள் எதிர்பாராத வகையில் உண்டாகும். செய்தொழிலிலும் இடைத்தரகர்கள் விலகி நேரடியாகப் பொருள்களை விற்று லாபம் காண்பீர்கள். குழந்தைகள் வகையில் இருந்த சிரமங்கள்  மறைந்து நிலைமை சீராகும். அடிக்கடி பயணங்கள் செய்து செய்தொழிலை மேன்மையடையச் செய்வீர்கள். யோகா, பிராணாயாமம் செய்து உடல்நலம் மனவளம் இரண்டையும் மேம்படுத்திக்கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.    
 
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவார்கள். கடின உழைப்பையே தாரக மந்திரமாகக் கொண்டு உழைக்கவும். சக ஊழியர்களிடம் நல்ல முறையில் பேசிப்பழகவும். சிலர் அனாவசியமாக உங்களிடம் பகைமை பாராட்டுவார்கள். வருமானத்திற்கு குறைவில்லை. அலுவலக ரீதியான பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டு. மதிப்பு, கௌரவம் கூடும்.  வியாபாரிகளுக்கு வரவேண்டிய பணம் விஷயமாக அக்கறை காட்டுவீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் லாபங்களைக் காண்பீர்கள். 

சமயோஜித புத்தியால் போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும்.  அதிக வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள். விவசாயிகள் திருப்திகரமான மகசூலைக் காண்பார்கள். பணவரவு நன்றாக இருக்கும். பழைய குத்தகை பாக்கிகளை திருப்பிச் செலுத்துவீர்கள். மாற்றுப் பயிர்களை பயிரிட்டு லாபம் காண்பீர்கள். 

அரசியல்வாதிகள் எதிர்பார்க்கும் காரியங்களில்  தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி காண்பீர்கள். பெயரும் புகழும் அதிகரிக்கும். முக்கிய தலைவர்களுடன் இணைந்து பணியாற்றும்  வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உள்ளத்தில் புதிய தெளிவுகளைப் பெறுவீர்கள். எதிரிகளின் பலம் குறையும். தொண்டர்களின் குறைகளை அக்கறையுடன் பரிசீலித்து தீர்க்க முயற்சிப்பீர்கள். வருமானம் பலவழிகளிலும் வந்து கொண்டே இருக்கும். 

கலைத்துறையினருக்கு வருமானம் ஓரளவு சீராக இருக்கும். முக்கிய முடிவுகளை உயர்ந்தோரைச் சந்தித்து எடுக்கவும். திறமைகளை வளர்த்துக்கொள்ள புதிய பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்திகளைக் கேட்பீர்கள். 

நாடிவரும் நண்பர்களுக்குத் தயங்காமல் உதவி செய்வீர்கள். உடன்பிறந்தோர் அன்பாக இருப்பார்கள். எவரிடமும் பேசும் நேரத்தில் கவனமாக இருக்கவும். மாணவமணிகள் எடுக்கும் முயற்சிகளுக்குத் தகுந்தவாறு மதிப்பெண்கள் பெறுவார்கள். பாடங்களை உடனுக்குடன் படித்து மனதில் நிறுத்துவது நல்லது. வருங்காலக் கனவுகள் பலிப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.  விளையாட்டில் ஆர்வத்தைச் சற்றுக் குறைத்துக் கொள்ளவும்.

பரிகாரம்: குலதெய்வ வழிபாடும். சப்த கன்னிகைகளின் வழிபாடும் சிறந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com