திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரகாளியம்மன் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை திருத்தேர் தலையலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் மதுரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவினைக் காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம்.
நிகழாண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த ஜனவரி 16 ஆம் தேதி பாக்கு படைத்தலுடன் தொடங்கி மூன்று மாதங்களாக அம்மனுக்கு பல்வேறு விழாக்கள் நடத்தி சிறப்பு பூஜைகள் செய்து வந்ததில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் தலையலங்கார நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (ஏப். 2) நடைபெற்றது.
இதில், கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த சிறிய மற்றும் பெரிய தேரினை பூக்கள், சேலைகள், வாழை மரம், மாங்காய், நுங்கு, கரும்பு மற்றும் நெட்டி மாலைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு அதில் அம்மனை வைத்து வழிபட்டு பக்தர்கள் இரு தேரையும் தலை மற்றும் தோளில் சுமந்து கோயிலை சுற்றி வந்தனர்.
மேலும் திருத்தேரானது வரும் ஏப்.8-ம் தேதி வரை தொட்டியத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் தூக்கிச்செல்வர். அப்போது பொதுமக்கள் தங்களது வீடுகளின் முன்பு புனித தீர்த்தம் ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுவர்.