கட்டுரைகள்

செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும்? பரிகாரம்!

ஜி.மஞ்சரி

செவ்வாய் என்கிற மங்களகாரகன் ஜாதகத்தில் மிக முக்கியமான கிரகம் ஆவார். செவ்வாய் கேந்திர திரிகோணத்தில் இருந்தால் தொழில், நிலம் மற்றும் அபரிமிதமான சொத்து, உடன்  பிறப்புகளால் உதவி, வீர தீர செயலுக்கு முக்கிய காரகனாக இருப்பார். அதேசமயம் மறுபக்கமாக ஒரு சில பாவங்களில் (கட்டங்களில்) தீமை என்ற நிலையையும் தோஷத்தையும் ஏற்படுத்துவார். களத்திர பாவங்கள் தொடர்புடன்  செவ்வாய் ஒருவருக்கு இருந்தால் கோபம், ஆக்ரோஷம், அதீத உணர்ச்சியில் வேகமுடன் இருப்பார்கள். அதனால்தான் திருமண பொருத்தம் பார்க்கும்பொழுது ஒருவருக்கு ஒருவர் ஈடுகொடுக்கும் அளவுக்கு தோஷம் உள்ள இருவருக்கு திருமணம் செய்கிறார்கள். ஆனாலும் அது ஒரு சில நேரங்களில் தவறாக முடிகிறது. 

செவ்வாய் என்பது ரத்த சம்பந்தமான காரக கிரகம். அறிவியல் ரீதியாக செவ்வாய் தோஷம் இருப்பவருக்கு ரத்தத்தில் ஆர்எச் பேக்டர் நெகட்டிவாக இருக்கலாம். இது குழந்தை பிறப்புக்கு பிரச்னையை தரவல்லது. வீட்டில் கல்யாணம் என்ற பேச்சு பேசியவுடன் ஆண் பெண் இருவருக்கும் திருமண பொருத்தம் மற்றும் தோஷம் இருக்கிறதா என்று பார்ப்போம். இதில்   செவ்வாய் தோஷத்தை நினைத்து ஒருவித பயம் பெற்றோர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். ஜாதக கட்டத்தை எடுத்தவுடன் அனைவர் கண்களிலும் படுவது செவ்வாய் தோஷம் தான். லக்கினத்திலிருந்து செவ்வாய் 2,4,7,8,12ல் இருந்தால் தோஷத்தை தருவார். அதேபோல் அடுத்தபடியான தோஷத்தை சந்திரன், சுக்கிரன்  இருக்கும் இடத்திலிருந்து செவ்வாய் 2,4,7,8,12ல் இருந்தால் குறைத்துத் தருவார். எடுத்துக்காட்டாக 2ல் செவ்வாய் இருந்தால் பேச்சில் விஷம் கக்கும் சொல் இருக்கும். இதனால் திருமண வாழ்க்கை சுகம் குறையும். ஏழு என்பது எதிர் பாலினத்தின் ஆக்ரோஷத்தைக் குறிப்பது.

எட்டு என்பது ஆயுளையும், 12ம் பாவம் அயணம் /மெத்தை சுகத்தைக் கெடுக்கும். அதில் முக்கிய பாவமான 7,8,12ல் இருந்தால் திருமண மணமுறிவு மற்றும் உடல் பிரச்னை ஏற்படுத்தும். இவைகளே தோஷம் என்று கூறுகிறோம். திருமண பொருத்தத்தை விட மன பொருத்தம் மிக முக்கிய பொருத்தம். தோஷம் இருந்தாலும் இதன் அடிப்படையில் பலபேர் திருமணம் முடித்து அவர்கள் ஓரளவு சீரான வாழ்க்கையை நடத்துகிறார்கள். பெண்கள் ஜாதகத்தில் லக்கினம் அல்லது சந்திர லக்னத்தில் பலம் எது என்று பார்த்து அதற்கு ஏற்ற ராசியைக் கொண்டு தோஷத்தைக் கணிக்க வேண்டும்.

செவ்வாய் தோஷம் என்ன செய்துவிடும் எப்பொழுது பிரச்னை கொடுக்கும் என்று பார்த்தால், களத்திர சம்பந்தம் கொண்ட பாவத்தோடு தொடர்புகொண்டால் தாமத திருமணம், குடும்ப உறவு பிரிவு, நோய், குழந்தைப்பேற்றில் சிக்கல் ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக திருமணம் ஆன ஒருவர் அவர் சுய ஜாதகத்தில் செவ்வாய் களத்திரம் மற்றும் குடும்ப ஸ்தானத்திலிருந்து, செவ்வாய் தசை ஏற்பட்டால் களத்திர பிரிவு நிகழும். அதுவே அந்த நபருக்கு செவ்வாய் தசை மற்றும் புத்தி பல வருடங்களுக்குப் பின் வந்தால், அவருக்கு தோஷமே இருந்தாலும் ஒன்றும் செய்யாது.

தோஷம் உள்ளவர்கள் -செவ்வாய் நீச்ச சுக்கிரனுடன் சேர்க்கை, செவ்வாய் அஸ்தமனமானால், செவ்வாய் ராகு நெருங்கிய பாகையில் இருந்தால், செவ்வாய்க் கிரக யுத்தத்தில் இருந்தால் தோஷம்  உண்டு. ஆனால் பரிகாரம் கிடையாது என்று ஜோதிட ஆராய்ச்சியில் சொல்லப்படுகிறது. ஆண்களுக்கு ஜாதகத்தில்  குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்களான 2,7 பாவங்களும், பெண்களுக்கு ஜாதகத்தில் களத்திர மற்றும் மாங்கல்ய ஸ்தானமான 7, 8ம் இடங்களில் செவ்வாய் இருந்தால் முழு தோஷம் வெளிப்படும்.

எல்லாருக்கும் செவ்வாய் தோஷம் என்று எடுத்த எடுப்பில் சொல்லக்கூடாது. அதற்கென்று ஒருசில விதிவிலக்கு உண்டு, அவை: செவ்வாய் சுபக் கிரகங்களுடன் சேர்ந்தாலும் அல்லது சுப பார்வை பட்டாலும் செவ்வாய் தோஷம் என்ற தன் குணத்தை மாற்றி சுப பலன்களை கொடுப்பார் என்று பல நூல்களில் கூறப்படுகிறது. செவ்வாய் ஆட்சி வீடான மேஷம், விருச்சிகம், உச்ச வீடான மகரம், யோகராக செயல்படும் கடகம் மற்றும் சிம்ம லக்னக்காரர்களுக்கு செவ்வாய் முழு சுபர் எனவே செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை.

செவ்வாயை குரு பார்த்தால் அல்லது குருவோடு சேர்ந்தால் தோஷம் அகன்று போகும். செவ்வாய் என்ற நெருப்பு கிரகம் தேவ குரு வீடான தனுசு, மீன வீட்டிலிருந்தால்  தோஷம் கிடையாது. நவாம்சத்தில் குரு செவ்வாய் சேர்ந்திருந்தால் தோஷம் இல்லை. இதுதவிர செவ்வாய் குரு நட்சத்திரம் கூடியிருந்தால் பரிகாரம் மூலம் தோஷ நிவர்த்தி செய்யலாம். செவ்வாய் மேஷம் விருச்சிகம் மகர ராசியிலிருந்து அவரை புதன், வளர்பிறை சந்திரன், குரு பகவான் இவர்களில் ஒருவர் பார்த்தால் தோஷமில்லை. 

சூரியன் மூலதிரிகோண வீடுகளான சிம்மம் என்கிற சூரிய பகவான் வீட்டிலும் மற்றும் சனி வீடான கும்ப ராசியில் செவ்வாய் இருந்தால் தோஷம் கிடையாது "ஸம்ஹ கும்ப நதோஷ ஸ்யாத் ப்ரத்யபக்ஷம் தேவகோணம்"l கும்பம் சிம்ம ராசியில் இருந்தால் தோஷம் கிடையாது என்று தேவ கேரளம் நூலில் எழுதியுள்ளது. ஜாதக கட்டத்தில் மறைவிடமான 12ம் வீடு புதன் வீடாக இருந்து அங்கு செவ்வாய் இருந்தால், தோஷம் கிடையாது. மற்றும் ஒருசிலர் ஜோதிட வல்லுநர்கள் புதனுடன் சேர்ந்தால் மற்றும் பார்த்தால்  தோஷம் அல்ல என்று கூறப்படுகிறது.

செவ்வாயின் மித்திரன் சூரியன், சந்திரன் குரு சேர்ந்து பார்த்து இருந்தால் தோஷம் இல்லை. சரராசியில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை. பாவிகளான  சனி ராகு கேது ஆகிய கிரகங்கள் யாரேனும் செவ்வாயுடன் சேர்ந்து இருந்தாலும் பார்த்தாலும் தோஷம் இல்லை. செவ்வாய் நின்ற ராசிநாதன் கேந்திர திரிகோணங்களில் இருந்தால் தோஷம் இல்லை. அவர் தன் வீட்டைப் பார்த்தாலும் தோஷமில்லை. லக்கினத்திலிருக்கும் சந்திரனுக்குக்கோ 4வது இடம் ரிஷபம், துலாம் வீட்டில் இருந்தால் தோஷம் கிடையாது.

நீர் கிரகமான சந்திரன் உடன் உஷ்ண கிரக செவ்வாய் தோஷத்தைத் தனிக்கும். செவ்வாய் 2,4,7,8,12 உள்ள பொழுது அங்குள்ள ராசிநாதன் உச்சமாகவோ ஆட்சியாகவோ இருந்தால் செவ்வாய் தோஷம் விலகும். புதன் வீடுகளான மிதுனம் கன்னியில் 4,7,8,12இல் செவ்வாய் இருந்தால் அதிக தோஷத்தை  வெளிப்படுத்துவார். அதுவே மிதுனத்திற்கு 2இல் செவ்வாய் நீச்சம். மிதுனம் கன்னி லக்கினமாக இருந்து செவ்வாய் 2,12ல் இருந்தால் தோஷமில்லை. செவ்வாய் நின்ற ஒருசில நட்சத்திரங்களிலும் தோஷம் தரவல்லது. எடுத்துக்காட்டாக அஸ்வினி 3, பரணி 2ல்  செவ்வாய் இருந்தால் கடுமையான தோஷம். ரிஷபம், துலாம்  லக்கினமாக இருந்து செவ்வாய் 12ல் மறைய பெற்றால் தோஷமில்லை.

செவ்வாய் தோஷம் பல்வேறு வகையில் விதிவிலக்கு நம் மூல நூல்களில் ஆராய்ந்து கூறப்பட்டுள்ளது. முக்கியமாக 12 ராசி கட்டத்தில் 8 ராசிகட்டம் மற்றும் சுபக் கிரக சேர்க்கை பார்வை பெற்று இருந்தால் தோஷம் வலு இழக்கப்படும். பின்பு அனைவரும் செவ்வாய் தோஷத்தை பார்த்து பயம் வேண்டாம். இவற்றைச் சொல்லியே திருமணம் பலபேருக்கு தாமதம் ஆகின்றது. இன்னும் நுணுக்கமான முறையில் பார்த்தால் செவ்வாய் தோஷத்திற்கு விலக்குகளை ஆராய்ந்து சொல்லலாம். செவ்வாய் தோஷம் இல்லாதவரை தோஷமுற்ற ஆண் /பெண் திருமணம் செய்வது கெடுதல்.

பரிகாரம்

  • முருகரும் துர்கையும் செவ்வாய் தோஷத்திருக்கு சிறந்த பரிகார தெய்வங்கள் 
     
  • லக்கினம் /ராசி - நீர் மற்றும் காற்று தத்துவம் கொண்டிருந்தால் ருச்செந்தூர் அல்லது மலை மேல் உள்ள முருகருக்கு பால்/ பன்னீர் அபிஷேகம்  செய்து, ஜாதகர் பெயரில் அர்ச்சனை செய்யலாம்.
     
  • லக்கினம்/ராசி நெருப்பு மற்றும் நில தத்துவம் கொண்டிருந்தால் வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் பழம்பெரும் முருகர் கோவிலுக்குச் சென்று பசு நெய் விளக்குப் போடலாம். சஷ்டியில் விரதம் இருந்து காவடி எடுக்கலாம்.
     
  • கோவிலில் முருகனுடைய  பாடல்கள் மற்றும் சஷ்டி கவசம் சொல்லலாம்.
     
  • பௌர்ணமி மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வீட்டில் துர்க்கைக்கு பூஜை செய்து, 9 சுமங்கலிக்கு உணவுடன் தாம்பூலம் கொடுக்கலாம்.
     
  • இந்த தோஷம் முற்றிலும் அகல மருத்துவரின் பரிந்துரை பேரில் அவ்வப்பொழுது ரத்த தானம் செய்யலாம்.

Whatsapp:8939115647
vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

SCROLL FOR NEXT