ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ.3.05 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களது காணிக்கைகளை கோயில் உண்டியலில் செலுத்துகின்றனர். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைக்கிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை வருகை புரிந்த பக்தர்களால் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ. 3.05 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.14 லட்சம் நன்கொடை: இதுதவிர, திருமலை ஏழுமலையான் தேவஸ்தானம் சார்பில் இயங்கி வரும் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ. 2 லட்சம், கல்விதானம் அறக்கட்டளைக்கு ரூ. 2 லட்சம் என மொத்தம் ரூ. 14 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
91,634 பேர் தரிசனம்
திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 91,634 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில், 31,485 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
திங்கள்கிழமை காலை நிலவரப்படி, காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிறைந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசிப்பதற்காக வெளியில் உள்ள தரிசன வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் 24 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர். நேர ஒதுக்கீடு டோக்கன், ரூ. 300க்கான விரைவு தரிசன டிக்கட், திவ்ய தரிசன பக்தர்கள் 3 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்து திரும்பினர்.