இரவில் தூங்குவதற்கு முன் பாட்டு கேட்பவர்கள் நீண்ட ஆழ்ந்த தூக்கத்தை அனுபவிப்பதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தோஷம், துக்கம், தனிமை, இழப்பு என எந்தவொரு உணர்வாக இருந்தாலும் இசை பலருக்கும் பெரிதும் உதவுகிறது. குறிப்பாக தனிமையில் இருக்கும் பலருக்கும் இசை ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
மன அழுத்தத்தைக் குறைக்க, ஒரு வேலையை சுறுசுறுப்பாக செய்ய, வேலைத்திறனை அதிகரிக்க என பல தருணங்களில் இசை உதவுகிறது. இசையினால் உயிர்வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
மூளையின் செயல்களை தூண்டச் செய்யும் ஆற்றல் இசைக்கு உண்டு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏன், இசைப்பிரியர்களுக்கு ஐ.க்யூ அளவு அதிகரிக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
இந்நிலையில் புதிய ஆய்வொன்று, இசையை கேட்பதால் தூக்கத்தின் தரம் உயருகிறது என்று கண்டறிந்துள்ளது.
இரவில் தூங்குவதற்கு முன் பாட்டு கேட்பவர்களின் தூக்க அளவு மற்றும் தரம் உயருகிறது. அதாவது ஆழ்ந்த , நீண்ட தூக்கத்தைப் பெறுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக வயதானவர்களுக்கு இது முற்றிலும் பொருந்தும் என்று கண்டறியப்பட்டது.
அமெரிக்க ஜெரியாட்ரிக்ஸ் சொசைட்டியின் ஜர்னலில் வெளியிடப்பட்ட பகுப்பாய்வில், இசையைக் கேட்காதவர்களை விட இசையைக் கேட்ட வயதான பெரியவர்கள் நன்றாக தூங்கினர்.
மேலும் துள்ளல் இசையை கேட்டவர்களைக் காட்டிலும் மெல்லிய இசையைக் கேட்டவர்களிடம் தூக்கத்தில் முன்னேற்றம் தெரிந்தது.
நான்கு வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து இசையைக் கேட்பது தூக்கத்தில் உள்ள பிரச்னைகளை சரிசெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் தூக்கம் வருவதில்லை என்று புலம்புவோர் பலர் இருக்கின்றனர். அதிலும் வயதானவர்கள் இரவில் தூக்கம் வராமல் சிரமப்படுகின்றன. தூக்கத்திற்க்காக மருந்துகளை தேடும் நாம், எந்தவித பக்க விளைவுகளும் இல்லாத இசையெனும் மருந்தை எடுத்துக்கொள்ள முயற்சிக்கலாமே!