வதோதரா: மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமலோ அல்லது 24 மணி நேரத்துக்குக் குறைவான நேரமே மருத்துவமனையில் இருந்திருந்தாலும் காப்பீடு எடுத்த நபர், மருத்துவக் கட்டணத்தை திரும்பப் பெறும் உரிமை பெறுகிறார் என்று வதோதரா நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ரமேஷ் என்பவரது மனைவிக்கு ஆன மருத்துவச் செலவை காப்பீட்டு நிறுவனம் வழங்க உத்தரவிட்ட வழக்கில்தான், நுகர்வோர் தீர்ப்பாயம் இந்த உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
இதையும் படிக்க.. ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநருக்கு அடுத்த கௌரவம்
வதோதரா நுகர்வோர் குறைதீர் கூடுதல் ஆணையம் வெளியிட்டிருக்கும் உத்தரவில், வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தின் காரணமாக, பல நேரங்களில் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமலேயே சிகிச்சை பெறும் அல்லது 24 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்திலேயே வீடு திரும்பும் வாய்ப்பு வளர்ந்துள்ளது. ஒருவேளை, நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமலோ அல்லது 24 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் சிகிச்சை பெற்று திரும்பினாலோ, அதைக் காரணமாகக் காட்டி, காப்பீட்டு நிறுவனங்கள், கட்டணத்தை திரும்பக் கொடுக்க மறுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக, அதற்கேற்ப சிகிச்சை முறைகள் மாறிவருகின்றன. அதற்கேற்பதான் மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள். சிகிச்சையளிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. தமிழகத்தின் தேவை வெறும் மருத்துவமனைகள் அல்ல.. அதற்கும் மேலே
ரமேஷ் என்பவர், தனது மனைவிக்கு 2017ஆம் ஆண்டு தோல் அழற்சி நோய்க்கு, முதல் நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று மறுநாள் வீடு திரும்பியுள்ளார். இதற்கான கட்டணம் ரூ.44,468ஐ காப்பீட்டு நிறுவனத்திடம் கோரியபோது, அவர் 24 மணி நேரத்துக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று கூறி காப்பீட்டுப் பணத்தைக் கொடுக்க நிறுவனம் மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து தீர்ப்பாயத்தில் ரமேஷ் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்பதை காரணம் காட்டி காப்பீடு வழங்குவதை மறுக்க முடியாது என்று தீர்ப்பளித்த தீர்ப்பாயம், ரமேஷுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது மற்றும் வழக்கு செலவுகளுக்கு என ரூ.5 ஆயிரத்தை கூடுதலாக வழங்கவும் உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறது.