பொதுவாக கோடைக் காலத்தில்தான் குடும்பத்துடன் சுற்றுலா செல்வார்கள். அவ்வாறு செல்வது பெரும்பாலும் ஊட்டி, கொடைக்கானலாகவும், ஏற்காடு, ஏலகிரியாகவும் இருக்கும்.
ஆனால், பலருக்கும் தெரியாத விஷயம், மழைக்கால சுற்றுலா. மழைக்காலத்தில் எப்படி சுற்றுலா செல்வது? மழைக்காலத்தில் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்கள் குறித்து ஒரு பார்வை..
மழைக்காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் பல இடங்கள் பசுமையாகக் கணப்படும். அதில் ஓரிடம் மூணாறு. தேயிலைத் தோட்டங்களை நல்ல மழைக்காலத்தில் சென்று பார்க்கும்போதும், அங்கிருக்கும் சிற்றருவி மற்றும் ஓடைகளில் நீரோடுவதும் சுற்றுலாவுக்கு ஏற்றது.
சிலர், இப்பகுதிகளில் மலையேற்றம் செல்வார்கள். நிச்சயம் மழைக்காலத்தில் இப்பகுதியில் மலையேற்றம் செல்வது அவ்வளவு சிறப்பானதாக இருக்கும்.
கோவா.. மிகச் சிறந்த சுற்றுலா தளம். மிகக் குறைந்த செலவில் கோவாவை சுற்றிப்பார்க்க ஏற்ற நேரம் மழைக்காலம்தான். விமானக் கட்டணம் முதல், விடுதிகள், உணவகங்கள் என அனைத்தும் கட்டுபாடியாகும் விலையில் கிடைக்கும். கோடைக்காலத்தில் கோவாவும் கொளுத்தும் என்பதால் இது நல்ல நேரம்.
அதிக ஏரிகள், துறைமுகம் மற்றும் அரண்மனை கொண்ட உதைப்பூர் மழைக்காலத்தில் சுற்றுலாவுக்கு ஏற்ற இடம். பல ஏரிகள் நிரம்பி வழிந்து கண்கொள்ளாக் காட்சியாகக் காணப்படும்.
கூர்க்.. சொல்லவே வேண்டாம். இங்கு மழைக்காலத்தில் ஆங்காங்கே திடீர் திடீர் என முளைக்கும் சிற்றருவிகள் மற்றும் ஓடைகள் அப்பகுதியையே சொர்க்கமாக்கிவிடுகிறது.
நீர்வீழ்ச்சிகள் உங்களைத் துரத்த வேண்டும் என்றால், மழைக்கான இடமாக சிரபுஞ்சி செல்லுங்கள்.
ஆலப்புழா பொதுவாக பசுமையாக இருந்தாலும், மழைக்காலத்தில் கால்வாய்களில் தண்ணீர் ஓடுவதும், பயிர்கள் செழிப்படைந்து வளர்ந்து இருப்பதும் நிச்சயம் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்.
கடைசியாக மேகமலை.. மேகக் கூட்டங்களைச் சேர்த்துக் கொண்டு உலா போகும் இடம். தேயிலைத் தோட்டங்களையும், வனப்பகுதிகளையும் காண இந்த நேரம் மிகச் சிறந்ததாக இருக்கும்.