மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியை தரக்கூடியது தேநீர் அல்லது டீ. பலருக்கு தனிமையைப் போக்க, ஆசுவாசப்படுத்திக்கொள்ள, மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள என சிறந்த பானமாக இருக்கிறது.
டீ குடிப்பது நல்லதா, கெட்டதா அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பது குறித்து ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், டீ குடிப்பதை அன்றாட வழக்கமாக வைத்திருப்பவர்கள் இன்று அதிகம்.
டீ குடித்தால் என்னென்ன நன்மை?
♦ டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது, இயற்கையாகவே நம் உடலில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை அதிகரிக்கிறது.
♦ வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது
♦ மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறது
♦ இது வாய்வழி கோளாறுகளைத் தடுக்கிறது
♦ புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
♦ அதுபோல ஆயுளைக் கூட்டும் என்று சமீபத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
♦ மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
♦ உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
இதையும் படிக்க | மாய்ஸ்சரைசர், சன்ஸ்கிரீன்... எதை முதலில் பயன்படுத்த வேண்டும்?
ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ குடிக்கலாம்? எவ்வளவு குடிக்கலாம்?
எந்தவொரு உணவும் அளவுக்கு மீறினால் நஞ்சுதான். டீயும் அப்படித்தான். நாள் ஒன்றுக்கு சாதாரணமாக ஒன்று அல்லது இரண்டு கப் டீ மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர் உடல்நல நிபுணர்கள்.
ஒரு கப் டீ 100- 150 மிலி வரை இருக்கலாம். காலை எழுந்ததும் ஒரு டீயும் பிற்பகல் அல்லது மாலையில் ஒரு டீயும் குடிக்கலாம். இரவு டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அது தூக்கமின்மையை ஏற்படுத்தும்.
டீயில் காஃபின் மற்றும் சர்க்கரை அளவை முடிந்தவரை குறைத்துக்கொள்ளலாம்.
ஏனெனில், காபின் அதிகம் இருந்தால் பக்க விளைவுகள் ஏற்படும். குறிப்பாக ஹீமோகுளோபின் உற்பத்தியைத் தடுத்து ரத்த சோகையை ஏற்படுத்தும். குறிப்பாக ரத்த சோகை உள்ள பெண்கள் காஃபின் குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது.
இதையும் படிக்க | டீ அதிகம் குடித்தால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் குறையும்!
எனினும், பால் டீயை விட பால் கலக்காத பிளாக் டீ அல்லது க்ரீன் டீதான் மிகவும் சிறந்தது என்கின்றனர் ஆய்வாளர்கள். நாள் ஒன்றுக்கு 4- 5 கப் டீ குடிக்கலாம் என்கின்றன சில ஆய்வுகள். அவை எல்லாம் பிளாக் டீ அல்லது க்ரீன் டீ கணக்கில்தான் வரும்.
எனவே, பால் கலக்காத டீ என்றால் நாள் ஒன்றுக்கு 3- 5 கப் வரை எடுத்துக்கொள்ளலாம்.
அதுபோன்று, பிளாக் டீயை விட க்ரீன் டீ சிறந்தது. உடல் எடையைக் குறைக்க க்ரீன் டீ மிகவும் உதவுகிறது. அதுபோல மூலிகை டீயையும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
டீ அதிகம் குடித்தால்...
உண்மையில், அதிகமாக தேநீர் அருந்துவது உங்கள் உடல் இரும்புச்சத்து உறிஞ்சுவதை குறைக்கும். இதனால் ரத்த சோகை ஏற்படும். பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கும். குமட்டல் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்னைகளை அதிகரிக்கும், தலைவலி, நெஞ்செரிச்சல், தூக்கமின்மை ஏற்படலாம். கர்ப்பிணிகள் டீ குடிப்பதைத் தவிர்த்து பால் அருந்தலாம்.
இதையும் படிக்க | மதியம் சாப்பிட்டவுடன் தூக்கம் வந்துவிடுகிறதா? என்ன காரணம் தெரியுமா?