எந்தவொரு சூழ்நிலையிலும் பலருக்கும் விருப்பமான ஒரு பானம் டீ அல்லது தேநீர். தேநீரில் பால் கலந்த டீ, பிளாக் டீ, க்ரீன் டீ, மூலிகை டீ என பல வகைகள் இருக்கின்றன.
டீ குடிப்பது உடல்நலத்திற்கு நல்லதா, கெட்டதா என்று பல ஆய்வுகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், டீ அதிகம் குடித்தால் டைப் 2 நீரிழிவு நோய் வரும் அபாயம் குறைவு என்கிறது சமீபத்திய ஓர் ஆய்வு.
டீ என்றால் பால் கலக்காத பிளாக் டீ, க்ரீன் டீ போன்றவை. இவற்றை குடிக்கும் பட்சத்தில் உடலில் சர்க்கரை அளவு சரியாக நிர்வகிக்கப்படுவதால் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் குறைவதாக சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
8 வெவ்வேறு நாடுகளில் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமானோரிடம் இருந்து 19 கூட்டு ஆய்வுகளின் படி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | மதியம் சாப்பிட்டவுடன் தூக்கம் வந்துவிடுகிறதா? என்ன காரணம் தெரியுமா?
நாள் ஒன்றுக்கு 4 கப் டீ குடிப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு அபாயம் 17% குறைவதாகவும் ஒரு நாளுக்கு 1-3 கப் டீ குடிப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு அபாயம் 4% குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேநீரில் உள்ள ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சியை எதிர்க்கும் தன்மை மற்றும் ஆன்டிகார்சினோஜெனிக் கூறுகள் காரணம் என்றும் சீனாவின் வுஹான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் சியாயிங் லீ கூறுகிறார்.
மேலும் டீ குடிப்பதற்கும் டைப் 2 நீரிழிவு நோய்க்கும் இடையே உள்ள தொடர்பைக் கண்டறிய மேலும் தொடர்ச்சியான ஆய்வுகள் தேவை என்கிறார் லீ.
தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 90% பேர் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அதிக தாகம், நாக்கு வறண்டு போதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடல் சோர்வு, உடல் எடை குறைதல், அடிக்கடி தொற்றுநோய் ஏற்படுதல் உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாகும்.
இதையும் படிக்க | இந்த 6 அழகுப் பொருள்களை உங்கள் துணையுடன் பகிர்ந்துகொள்ளலாம்!