தலைவலி....பலருக்கும் பல நேரங்களில் இருக்கும் ஒரு பிரச்னை. தலைவலி வந்தாலே எரிச்சல் அதிகம் இருக்கும். ஏனெனில், எந்த வேலையையும் இந்த தலைவலி செய்யவிடாது. இதனால் தலைவலியைப் போக்க உடனடியாக ஒரு மாத்திரையை விழுங்குவதுதான் பலரும் முயற்சிக்கும் ஒரு தீர்வாக இருக்கிறது.
ஆனால், தலைவலிக்கு மாத்திரைகளை எடுத்துக்கொள்வது மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்களே எச்சரிக்கின்றனர். அவ்வாறு மாத்திரைகளை எடுத்துக்கொள்வது சிறுநீரகம், இதய பிரச்னைகளை ஏற்படுத்தும்.
சரி, தலைவலியைப் போக்க என்ன செய்யலாம்?
1. தண்ணீர் குடித்தல்
தலைவலி வந்தால் நீங்கள் முதலில் செய்ய வேண்டிய விஷயம் நிறைய தண்ணீர் குடிப்பது. உடலில் நீர்ச்சத்து குறைவதாலும் தலைவலி ஏற்படும். முடிந்தால், உங்கள் உடல் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் பெற தண்ணீரில் சிறிது உப்பு கலந்து குடிக்கலாம். பதிலாக, எலக்ட்ரோலைட் பானம் அருந்தலாம்.
இதையும் படிக்க | குறைந்த ரத்த அழுத்தமா? எப்படி சரிசெய்யலாம்?
2. அமர்ந்திருக்கும் முறை
நேராக நிமிர்ந்து உட்காராவிட்டாலும் தலைவலி வரலாம். உதாரணமாக, குனிந்து மொபைலைப் பார்க்கும்போது கழுத்து மற்றும் முதுகின் மேல் பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனாலும் தலைவலி ஏற்படலாம். எனவே, அவ்வப்போது தலையை அசைக்க வேண்டும். அப்பகுதியில் மசாஜ் செய்யலாம்.
3. காற்று
காற்று குறைவான(ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு குறைவான) இடத்தில் இருந்தாலும் தலைவலி வரும். எனவே, ஜன்னலைத் திறந்து வைப்பதுடன் காற்றோட்டமான அறையில் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
4. வெளிச்சம்
கண்களுக்கு கூசக்கூடிய அல்லது அதிக ஒளி கொண்ட விளக்குகளை அகற்றி விடுங்கள். குறிப்பாக எல்இடி விளக்குகள் கண்களுக்கு பிரச்னை ஏற்படுத்தக்கூடியவை. இது தலைவலியை உண்டுபண்ணும்.
5. வெளியே செல்லுங்கள்
நீங்கள் எந்த வேலை செய்தாலும் ஓய்வு எடுக்க வெளியில் செல்வது உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நல்லது. காற்று, சூரிய ஒளி..என இயற்கை உங்கள் மனநிலையை மேம்படுத்தும். ஏனெனில், மன அழுத்தத்தினால்தான் பெரும்பாலும் தலைவலி வருகிறது.
நாள்பட்ட தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி இருந்தால் மருத்துவரை அணுகுவது கட்டாயம்.
இதையும் படிக்க | ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம்? அதிகம் குடித்தால் என்னவாகும்?