தற்போது செல்லிடப்பேசி, கணினி, மடிக்கணினி ஆகியவை நம் வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்டன. நமது நாளின் பெரும் பகுதியில் கணினி அல்லது மடிக்கணினி முன்புதான் அமர்ந்திருக்கிறோம்.
இது ஒருபுறமிருக்க, பலரும் தங்களது கைப்பேசிக்கு அடிமையாகிவிட்டிருக்கிறார்கள். பணி தவிர்த்து பொழுதுபோக்குக்காக பலரும் நம்பியிருப்பது இந்த கைப்பேசியைத்தான்.
இவையெல்லாம் நமது நேரத்தைக் குடித்துவிடுவது மட்டுமல்லாமல், கண் நலத்தையும் குழிதோண்டி புதைத்துவிடுகிறது.
கணினி, கைப்பேசி என எதுவாக இருந்தாலும், நமது கண்களின் பார்வைத் திறனை மட்டும் குறைக்கவில்லை, கூடவே, இதர பல பிரச்னைகளையும் கொண்டு வந்து கொடுக்கிறது. அவை, தெளிவற்ற பார்வை, கண் வறட்சி, கண் எரிச்சல் போன்றவற்றுடன் தலைவலி மற்றும் கழுத்து வலிகளும் கொசுறாகக் கிடைக்கின்றன.
இதுபோன்று தொடர்ந்து கணினித் திரைகளைப் பார்த்துக் கொண்டே இருப்பவர்கள், இருந்தாக வேண்டியவர்கள், அடிக்கடி கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். திரையைத் தவிர்த்து வேறு எங்கிலும் பார்வையைத் திருப்ப வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கண்களை அடிக்கடி சிமிட்டி, கண் வறட்சியைப் போக்க வேண்டும்.
சிலருக்கு ஏதேனும் பிரச்னைகள் தொடங்கியிருந்தால், உடனடியாக கண் மருத்துவரை நாடி சிகிச்சையை தொடங்குதல் நலம். கண் வறட்சியை உணர்ந்தால், மருத்துவரின் ஆலோசனையின்பேரில் கண் சொட்டு மருந்துகளைக் கூட பயன்படுத்தலாம்.
எந்த பிரச்னையும் இல்லை, ஆனால் வந்துவிடுமோ என்று அஞ்சுபவர்கள், 6 மாதம் அல்லது ஒரு ஆண்டு இடைவெளியில் கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்கிறார்கள்.