நகர்ப்புறங்களில் மக்கள்தொகையில் ஆண்களைவிட பெண்கள் அதிகமிருந்தாலும் நகரங்களில் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வொன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் பிகேவியரல் எக்காலஜி(Behavioral Ecology)' இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
டர்கு பல்கலைக்கழகம், ஹெல்சின்கி பல்கலைக்கழகம் மற்றும் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழு, இரண்டாம் உலகப் போரின்போது பின்லாந்தில் நிகழ்ந்த இடம்பெயர்வு நிகழ்வை எடுத்துரைத்தது.
பின்லாந்தின் 10 சதவிகிதம் பேர் சோவியத் யூனியனிடம் ஒப்படைக்கப்பட்டு சுமார் 4,00,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதற்காக பின்லாந்து அரசாங்கம் அவர்களுக்கான ஒரு இடத்தை ஒதுக்கியது. அதன்படி, 1945 முதல் 1955 வரையிலான காலகட்டத்தில் இடம்பெயர்ந்த 8,296 பெண்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டதில் இந்த இடம்பெயர்வு, பெண்களிடையே கருவுறுதலை மிகவும் பாதித்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அலுவலகத்தில் சிறப்பாக பணிபுரிய வேண்டுமா?
இதன் அடிப்படையில் தற்போது கல்வி மற்றும் வேலைக்காக கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு பெண்கள் இடம்பெயர்கின்றனர். பின்னர் திருமணம் செய்துகொள்வதற்கான வயது அதிகரிப்பு உள்ளிட்டவை காரணங்களாக தெரிவிக்கப்படுகின்றன.
மேலும், வேலை மற்றும் சூழ்நிலை கருதி பெண்கள் பலரும் குழந்தைப் பெறுதலை தள்ளிபோடுகின்றனர். இதுவும் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன், நகரத்துப் பெண்கள் சிலர் குழந்தை பெற்றுக்கொள்வதையே விரும்புவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதவிர நகரத்து வளர்ச்சியினால் உணவு பழக்கவழக்கங்கள், சுற்றுசூழல் மாறுபாடு உள்ளிட்ட காரணிகளும் குழந்தை பெறுதலை பாதிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஒட்டுமொத்தமாக, கிராமப்புறங்களுடன் ஒப்பிடும்போது நகர்ப்புறங்களில் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு 15 சதவீதம் குறைவாக உள்ளதாக இந்த ஆய்வு கூறுகின்றது.
வாழ்க்கை முறையின் பெரும் மாற்றத்தினால் இன்று பெண்களுக்கு குழந்தையின்மை, கருத்தரித்தலில் பிரச்னை, மாதவிடாய்க் கோளாறுகள், பெண் குழந்தைகள் இளம் வயதில் பூப்பெய்தல், குழந்தை பிறக்கும்போது ஏற்படும் தாய்-சேய் உடல்நலப் பிரச்னைகள் உள்ளிட்டவை இக்காலத்தில் அதிகரித்துதான் காணப்படுகின்றன. இதனால்தான் கருத்தரித்தல் சிகிச்சை மையங்களும் தற்போது நகரங்களில் பெருகி வருகின்றன. எதிர்வரும் காலத்தில் இந்த நிலைமை மேலும் மோசமாகும் என்று கணிக்கப்படுகிறது.
தேவைக்கு மட்டுமே தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பயன்படுத்தி வாழ்க்கைமுறையை இயற்கை சார்ந்த சூழலில் ஏற்படுத்திக்கொள்வதே இந்த பிரச்னைக்கான தீர்வுகளில் ஒன்றாக இருக்கும்.
இதையும் படிக்க | வாழைப்பழத் தோலை தூக்கி எறியாதீங்க...!