குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் டயபர்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருள் இருப்பதாக தில்லியைச் சேர்ந்த ஒரு தனியார் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பொதுவாக இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பில் ஒரு அத்தியாவசியப் பொருளாக டயபர் இருக்கிறது. சாதாரண துணியைப் பயன்படுத்தும்போது குழந்தை சிறுநீர் கழித்துவிட்டால் அது அசுத்தம் என எண்ணி குழந்தைக்கு டயபர் மாற்றிவிடுவது ஒரு பேஷனாககூட மாறிவிட்டது.
வெளியில் குழந்தையை கொண்டு சென்றால் மட்டும் பயன்படுத்துவது மாறி இப்போது வீட்டில் இருக்கும்போது கூட குழந்தை டயபருடன்தான் இருக்கும் நிலைமை ஆகிவிட்டது. அதன் விளைவுகள் தெரியாமல் சிலர் குறிப்பிட்ட நேரத்திற்கு கூட டயபரை மாற்றுவதில்லை.
இந்நிலையில், டயபர் குழந்தையின் உடல்நலத்திற்கும் மிக மோசமான விளைவுகளை உண்டாக்கக் கூடும் என சமீபத்திய ஆய்வு கூறுகிறது. அதாவது, டயபரில் உள்ள 'ப்தாலேட்' பொருள் குழந்தையின் உடல்நலனில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் டயபரில் ப்தாலேட் வேதிப்பொருள் கலப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்தியாவில் குழந்தைகள் பயன்பாட்டிற்கு விற்கப்படும் டயபரில் இந்த வேதிப்பொருள் கலந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வேதிப்பொருளுக்கு தடை விதிக்கவும், தாய்மார்கள் முடிந்தவரை குழந்தைகளுக்கு டயபரை பயன்படுவதை தவிர்க்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.