குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்குப் பதிலாக ஒருவர் தனது நண்பர்களுடன் பழகுவது அதீத மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என புதிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் எஸ்.எம்.யு பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் நாதன் ஹட்சன் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
மக்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவழிப்பதைவிட நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிக்க முனைகிறார்கள். அதிலும், வேலைப்பளுவின்போதும், கஷ்டமான சூழ்நிலைகளிலும் நண்பர்களுடன் நேரம் செலவழிக்க மிகவும் விருப்பப்படுகிறார்கள்.
400 க்கும் மேற்பட்ட ஆய்வு பங்கேற்பாளர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரடியாக சில காலம் நேரம் செலவழிக்கும்படி அறிவுறுத்தி அதன்பின்னர் அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இப்போது அவர்களது அனுபவங்கள் மற்றும் யாருடன் இருக்கும்போது அதிக மகிழ்ச்சியை உணர்ந்தார்கள் என உணர்வுகள் ரீதியாக கேட்கப்பட்டது. இதற்காக 0 முதல் 6 வரை மதிப்பீடு வழங்கப்பட்டது.
இதில் பெரும்பாலானோர் தங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது சுவாரசியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக கூறியுள்ளனர். நண்பர்களுடன் இருக்கும்போது வேலையும் குறைவாக இருக்கிறது. எந்தவித கவலையும் இன்றி அவர்களுடன் நேரம் செலவழிக்கிறார்கள்.
அதே குடும்பத்தினருடன் நேரம் செலவளிக்கும்போது வேலைப்பளு அதிகமாக இருக்கிறது. கடமை உணர்வு அதிகமாக இருக்கிறது. குறைவான மகிழ்ச்சியையே பெறுகின்றனர்.
அதேநேரத்தில் நண்பர்களுக்கு அடுத்தபடியாக ஒருவர், தனது வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தை பராமரிப்பில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்.
குழந்தைகள், காதலர்/துணைவர் மற்றும் நண்பர்களுடன் இருக்கும்போது பங்கேற்பாளர்களின் மனநிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த ஆய்வு குடும்பத்தைப் பற்றிய நம்பிக்கையான பார்வையை வழங்குகிறது. மேலும், நண்பர்களைப் போன்று, அனைவரும் தங்கள் குடும்பத்தினரை குறிப்பாக மனைவியையும், குழந்தைகளையும், உண்மையாக நேசிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.