செய்திகள்

மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த சமூக வலைத்தளங்கள் உதவுகின்றன: ஆய்வில் தகவல்

14th Aug 2020 01:05 PM

ADVERTISEMENT

சில சமூக வலைத்தளங்கள் மாணவர்களின் கல்விக்கு உறுதுணையாக இருப்பதாக ரஷியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. 

சமூக வலைத்தளங்களும், மொபைல் போனும் மனித வாழ்வில் இன்றியமையாததாக மாறிவிட்டன. சமூக வலைத்தளங்களில் மணிக்கணக்கில் நேரம் செலவழித்து இளம் தலைமுறையினர் எதிர்காலத்தை வீணடிக்கின்றனர் என்ற பொதுவான குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், பல சமூக வலைத்தளங்கள் மாணவர்களின் கல்விக்கு உறுதுணையாக இருக்கின்றன என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரஷியாவின் ஹெச்.எஸ்.இ. பல்கலைக்கழகம் மேற்கொண்ட இந்த ஆய்வில், நல்ல பயனுள்ள சமூக வலைத்தளங்கள், மாணவரின் கல்வித்திறனில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அதன் மூலமாக மாணவர்கள் எளிதாக பல விஷயங்களை கற்றுக்கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.  

பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவைச் சேர்ந்த 117 மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மாணவர்கள் தங்கள் நண்பர்களையும், ஆசிரியர்களையும் தேர்ந்தெடுக்கும் விதம் குறித்தும் அவர்களது கல்வி செயல்திறன் குறித்தும் கண்காணிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதன்படி, 'குடும்பத்தின் சமூக பொருளாதார நிலை, சுயகற்றலுக்காக செலவழிக்கும் நேரம், வேலையில் ஈடுபடும் நேரம், பள்ளி சூழ்நிலை உள்ளிட்டவை மாணவர்களின் கல்வி செயல்திறனை பாதிக்கும் காரணிகளாக உள்ளன. 

ஆனால், ஒரு மாணவர் வகுப்பில் படிப்பதை விட தனியே சமூக வலைத்தளங்களின் மூலமாக அறிவைப் பெறுவது சிறந்தது. ஏனெனில், வகுப்பறையில் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு, பொறாமை, போட்டி என இருக்கும். ஆனால், தனியே பயிலும்போது கூடுதல் நம்பிக்கை கிடைக்கிறது' என்று ஆய்வு கூறுகிறது. 

அதுமட்டுமின்றி, 'நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில், மாணவர்கள் பொதுவாக அவர்களின் கல்வித் திறமையை கருத்தில் கொள்வதில்லை எனவும், ஆனால், காலப்போக்கில் இது மாறுபட்டு அனைவரும் ஒரே நிலையில் செயல்பட முனைகிறார்கள் என்றும் ஆசிரியர்கள் கூறுகின்றனர். வயதுமிக்க சாதனையாளர்களுடன் இருப்பவர்கள் தங்களது திறமையைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்கின்றனர். குறைந்த அல்லது சக வயதுடைய நண்பர்களிடம் பழகுபவர்கள் பெரிதாக திறமையில் அக்கறை காட்டுவதில்லை' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : students
ADVERTISEMENT
ADVERTISEMENT