தொழிலதிபர் ரத்தன் டாடா சமீபத்தில் தான் இன்ஸ்டாகிராமில் இணைந்தார்.
இணைந்தது முதலே அவருக்கு அங்கு மிகப்பெரிய வரவேற்பு.
2018 ஆம் ஆண்டில் டாடா ஹவுஸ் தனது சர்வதேச தலைமையகத்தை மும்பையில் திறந்தது. அதில் அப்பகுதி தெரு நாய்களுக்கான வசிப்பிடம் ஒன்றையும் இணைத்திருந்தது தான் அதன் சிறப்பான அம்சம் எனக் கருதுகிறார் ரத்தன் டாடா.
அவர் கடந்த சனிக்கிழமை அன்று தனது இறந்து விட்ட வளர்ப்பு நாய் குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்து நெட்டிஸன்கள் நெக்குருகிப் போனார்கள். அந்தப் பதிவிற்கு இதுவரையிலும் 3 லட்சம் விருப்பக்குறிகளும் 2,500 கருத்துரைகளும் கிடைத்திருக்கின்றன.
அதைப் பார்த்து விட்டு ஒருவர் ‘நீங்கள் ஒரு தேவதை மிஸ்டர் ரத்தன் டாடா’ எனப் புகழ்கிறார். இன்னொருவர் ரத்தன் டாடாவை ‘தங்க இதயம் படைத்த ஒரு மனிதன்’ என்கிறார்.
இத்தனைக்கும் ரத்தன் டாடா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது இதைத்தான்...
‘இன்றைய தினம் மறைந்து விட்ட எனது செல்ல நாய் டிட்டுவிற்கு 14 ஆவது பிறந்த தினமாயிருந்திருக்க வேண்டிய நாள். நான் இப்போதும் வீட்டிற்கு வருவது இரண்டு அன்பான ஆத்மாக்களுக்காகத்தான். வீட்டிற்கு வெளியிலும் அவர்களைப் போன்றவர்கள் நிறையப் பேரை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறேன். அவர்களுள் சில நாய்களுக்கு மட்டுமே சில குடும்பங்களுடன் ஒட்டி உறவாட வாய்ப்புக் கிடைத்து விடுகிறது. ஆனால், இதைப் போன்ற இன்னும் பல ஜீவன்கள் தெருக்களில் கஷ்டப் பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. ஆயினும் மனிதர்களின் மீது அவை கொண்ட அன்பு மட்டும் எப்போதும் மாறுவதே இல்லை. தெருநாய்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை எப்போதுமே என் மரியாதைக்குரியவர்களாக நான் கருதுகிறேன்’
- என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தனது வளர்ப்பு நாய்களின் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.