சிலருக்கு மாலை வேளைகளில் டீயுடன் சமோசா சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். அதுவும் முறுமுறுப்பான சமோசாவுக்குள் உருளைக்கிழங்கு அல்லது வெங்காய மசாலாவை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. இந்த ருசியான சமோசாவின் நெடிய வரலாறு என்னவென்று தெரியுமா?
இப்போது 'சமோசா' என்பது மிகவும் பிரபலமான இந்திய உணவுப் பொருளாக மாறிவிட்டிருக்கிறது. சர்வதேச அளவில் அறியப்படுகிறது. ஆனால், சமோசாவின் மூலம் மத்திய கிழக்கு நாடுகள் என்று சொன்னால் பலருக்கும் வியப்பாக இருக்கும்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், மாமிசத் துண்டுகள் அடங்கிய 'சம்புசச்' என்கிற பதார்த்தம் மிகவும் பிரபலம். 10-ஆவது நூற்றாண்டில் அரேபியர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து நுழைந்த போது, சம்புசச்சை இங்கே அறிமுகப்படுத்தினார்கள்.
வடநாட்டில் பஞ்சாபியர்களும், ராஜஸ்தானியர்களும் அதை உருளைக்கிழங்கையும், வெங்காயத்தையும் அடிப்படையாகக் கொண்ட தாவர உணவாக மாற்றி, இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தி விட்டனர். இப்போது சம்புசச் வழக்கொழிந்து உலகம் முழுவதும் சமோசா பிரபலமடைந்து விட்டிருக்கிறது.
- சத்தீஷ்