சிவில் சர்வீஸ் நேஷனல் டாப்பர்ஸ் 25 பேரில் ஸ்ரீதன்யாவுக்கு மட்டும் ஏன் ஸ்பெஷல் பாராட்டு?! வாங்க தெரிஞ்சுக்கலாம்!

கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட இந்திய குடிமைப்பணிகளுக்கான தேர்வு முடிவுகளில் ஸ்ரீதன்யா உட்பட மேலும் 25 கேரள மாணவர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர். அதில் இருவர் முதல் 100 ரேங்குகளுக்குள் வெற்றி பெற்றுள்ள
சிவில் சர்வீஸ் நேஷனல் டாப்பர்ஸ் 25 பேரில் ஸ்ரீதன்யாவுக்கு மட்டும் ஏன் ஸ்பெஷல் பாராட்டு?! வாங்க தெரிஞ்சுக்கலாம்!

நான் மிகுந்த சந்தோஷத்தில் திளைக்கிறேன். எனது மொத்த குடும்பமும் என் சந்தோஷத்தில் பங்கெடுத்துக் கொண்டிருப்பது எனக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது. பிரைட்டான புன்னகையுடன் பேசத் தொடங்கும் ஸ்ரீதன்யாவின் முகத்தில் இந்திய குடிமைப்பணித்தேர்வில் ஜெயித்த சந்தோஷம் இன்னும் அப்படியே நீடிக்கிறது.

கேரளமாநிலம் வயநாடு பழங்குடி இனத்தைச் சார்ந்தவரான ஸ்ரீதன்யாவுக்கு வயது 25. இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெற தொடர்ந்து முயன்று வந்த ஸ்ரீதன்யா, தனது 3 வது முயற்சியில் இம்முறை வெற்றி வாகை சூடியுள்ளமை குறித்து வயநாடு மாவட்ட ஆட்சியரும் கேரள முதல்வர் பினராயி விஜயனும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். கேரளாவைப் பொருத்தவரை வயநாட்டிலிருந்து இந்திய குடிமைப் பணித் தேர்வுகள் எழுத முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை பொதுவாக வெகு குறைவு. அங்கிருந்து வந்தவரான ஸ்ரீதன்யா தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் 410 வது மாணவியாக வெற்றி பெற்றிருப்பது அம்மாவட்டதிலிருந்து போட்டித் தேர்வுகள் எழுத முயற்சிக்கும் பிற மாணவர்களுக்கு மிகுந்த உந்துதலாக அமைய வாய்ப்பிருக்கிறது. அத்துடன் முந்தைய ஆண்டுகளில் நிகழ்ந்ததைப் போல தர வரிசை அடிப்படையில் இந்த ஆண்டு ஸ்ரீதன்யா ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகளும் உண்டு என்று வயநாடு மாவட்ட துணை ஆட்சியர் என் எஸ் கே உமேஷ் ஸ்ரீதன்யாவை வாழ்த்தியுள்ளார்.

கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட இந்திய குடிமைப்பணிகளுக்கான தேர்வு முடிவுகளில் ஸ்ரீதன்யா உட்பட மேலும் 25 கேரள மாணவர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர். அதில் இருவர் முதல் 100 ரேங்குகளுக்குள் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அலுவா மாவட்டம் மேற்கு கொடுங்கல்லூரைச் சேர்ந்த ஸ்ரீலக்‌ஷ்மி தேசிய அளவில் 29 வது மாணவியாகவும், படியட்காவைச் சேர்ந்த ரெஞ்சினா மேரி வர்கீஸ் 49 வது டாப்பராகவும் ஸ்ரீதன்யா 410 வது டாப்பராகவும் தேர்வு பெற்றுள்ளனர். இவர்களில் ஸ்ரீதன்யா , பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களிலிருந்து இந்திய குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்ற முதல்மாணவி என்பதால் அவர் மீது கூடுதல் கவனம் குவிகிறது. ஸ்ரீதன்யா கேரளாவைச் சேர்ந்த குரிச்சியா எனும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். இவருடன் சேர்ந்து இந்திய குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சியுற்ற 25 மாணவர்களில் 9 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

ஸ்ரீதன்யா தனது இளநிலைக் கல்வியை கோழிக்கோட்டிலிருக்கும் தேவகிரி செயிண்ட் ஜோசப் கல்லூரியிலும் முதுகலைக் கல்வியை கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகத்தில் முடித்தவர். குடிமைப் பணித்தேர்வு எழுத முதன்மைப் பாடமாக ஸ்ரீதன்யா தேர்ந்தெடுத்தது இந்திய வரலாறு.

ஸ்ரீதன்யாவைப் போன்றவர்கள் தேசிய அளவில் ரேங்க் பெறுவதென்பது அவர் சார்ந்த சமூகத்தில் மேலும் பலர் இத்தகைய தேர்வுகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வெற்றி பெற உதவும் என கேரள் முதல்வர் பினராயி விஜயனும் தற்போது பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளராக வயநாடு தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தங்களது பாராட்டுகளில் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com