நாட்டுப்புறத்து ஸ்டைலில் வித்யாசமாய் ஒரு முருங்கைக்காய் ரெஸிப்பி!

வெறும் சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதம், ரசம் என எதற்கும் இதைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டு முடித்து விடலாம். சுவைக்கும் சுவையும், சத்துக்கு சத்துமாச்சு!
நாட்டுப்புறத்து ஸ்டைலில் வித்யாசமாய் ஒரு முருங்கைக்காய் ரெஸிப்பி!

முருங்கைக்காயை வைத்து என்னவெல்லாம் சமைக்கலாம்?

உடனே பாக்யராஜின் ‘இது நம்ம ஆளு’ சினிமா பார்க்கச் சொல்லி விடாதீர்கள்.

அந்தப் படத்தில் காட்டியதையும் தாண்டி முருங்கைக்காயை வைத்து இன்னும் விதம் விதமான ரெஸிப்பிகள் செய்யலாமாம். முருங்கை இந்தியா முழுவதிலும் விளைகிறது. அங்கே ஒவ்வொரு மாநிலத்திலும் முருங்கையை வித்யாச வித்யாசமாக சமைக்கிறார்கள். நாம் தான் இன்னும் முருங்கைக்காயை வெறும்  சாம்பாரிலும், காரக்குழம்பு, புளிக்குழம்புகளில் மட்டும் போட்டுச் சமைத்துச் சலித்துக் கொண்டிருக்கிறோம். அட சலிப்பு என்பது சாப்பிடும் நமக்கு அல்ல, சமைக்கப்படும் முருங்கைக்காய்க்கு! பின்னே நம்மை ஒவ்வொரு நாளும் நாம் எப்படியெல்லாம் அலங்கரித்துக் கொள்கிறோம். தினமும் ஒரே விதமாகவா அலங்கரிக்கத் தோன்றுகிறது? அப்படித்தான் இதுவும்.

சரி, இப்போது முருங்கையை வைத்து வித்யாசமாக ஒரு ரெஸிப்பி செய்து பார்ப்போமா?

தேவையான பொருட்கள்:

  • முருங்கைக்காய்கள்: 10 அல்லது 12
  • சின்ன வெங்காயம்: 6 அல்லது 7 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
  • பச்சை மிளகாய்: 5 (பொடி குண்டு மிளகாயாக இருந்தால் நல்லது)
  • கசகசா: 1 டீஸ்பூன்
  • வெள்ளை கடுகு: 1 டீஸ்பூன்
  • உப்பு: தேவையான அளவு
  • சர்க்கரை: ஒரு சிட்டிகை
  • கடுகெண்ணெய் அல்லது நல்லெண்ணெய்: 3 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் கிரில் அடுப்போ அல்லது கறி அடுப்போ இருந்தால் அத்தனை முருங்கைக்காய்களையும் நன்றாக சுட்டுக் கொள்ளுங்கள். முருங்கைக்காய்களுக்குள் இருக்கும் சதைப்பகுதி வெந்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு காய்களை சுட்டு எடுத்து சற்று ஆற விடவும். கை பொறுக்கும் சூட்டுக்கு வந்த உடன் முருங்கைக்காய்களைக் கீறி உள்ளிருக்கும் வெந்த சதைப்பகுதியை கத்தி கொண்டு வலித்து எடுத்து விடுங்கள். அதை ஒரு கிண்ணத்தில் வைத்து விட்டு. பச்சை மிளகாய், வெண்கடுகு, கசகசா மூன்றையும் அம்மி இருந்தால் அம்மியிலோ அல்லது மிக்ஸியிலோ இட்டு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். முருங்கைச் சதையையும் இதே விதமாக அரைத்து ஒரு கிண்ணத்தில் வைக்கவும். 

அடுத்ததாக அடுப்பைப் பற்ற வைத்து, கடுகெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் முருங்கைச் சதையை அதில் போட்டு வதக்கவும். அது சற்று வெந்தவுடன் அதனுடன் அரைத்த பச்சை மிளகாய், கசகசா விழுதைச் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும். வெந்ததும் கடைசியாக ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்துப் பிசிறி விட்டு இறக்கவும். இறக்கும் பக்குவம் என்பது வதக்கிய துவையலில் இருந்து எண்ணெய் பிரிந்து மேலே வரவேண்டும். அப்போது தான் இந்த நாட்டுப்புறத்து முருங்கைத் துவையலின் ருசி ஊரைக்கூட்டும்.

வெறும் சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதம், ரசம் என எதற்கும் இதைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டு முடித்து விடலாம்.

சுவைக்கும் சுவையும், சத்துக்கு சத்துமாச்சு!

இந்த ரெஸிப்பியை DESI FOODS எனும் யூ டியூப் விடியோ பார்த்து தான் செய்யக் கற்றுக் கொண்டேன். அதில் வேறு என்ன சுவாரஸ்யம் என்றால், அதில் இந்த ரெஸிப்பியைச் செய்து காட்டிய பெண்மணி,  அப்போது தான் ஃப்ரெஷ் ஆகப் பறித்த முருங்கைக்காய்கள், வெங்காயம், பச்சை மிளகாய் என கண் முன்னே ஃப்ரெஷ் ஐட்டங்களாகச் சமையலுக்குப் பயன்படுத்தி அசத்தினார். அந்தக்காட்சி இந்த முருங்கைத் துவையல் ரெஸிப்பியின் சுவையை மேலும் கூட்டுவதாக இருந்தது.

நாமும் மாடித்தோட்டம் போட்டு தினம் தினம் இப்படி ஃப்ரெஷ் ஆகப் பறித்துச் சமைத்தால் சூப்பராக இருக்கும் தானே! செய்து பாருங்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com