எப்போதும் பயணங்கள் மேற்கொண்ட பிறகு களைப்புடன் வீடு திரும்புபவர்களும், பயணத்திற்கு தயாராக இருப்பவர்களும் கடலை மாவை தண்ணீரில் நன்றாக குழைத்து முகத்தில் பூசி, அவை நன்றாக உலர்ந்த பின்பு குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் சருமம் பளிச்சென்று இருக்கும்.
குளிக்கும் போது கடலை மாவை முகத்தில் பூசி கழுவினால் முகம் பளபளப்பாகும். கடலை மாவுடன் தக்காளியை கூழாக குழைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினாலும் முகப்பொலிவைப் பெற முடியும்.
சருமம் எண்ணெய்ப் பிசுபிசுப்புத் தன்மையுடன் இருந்தால், கடலை மாவுடன் தயிர், எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் எண்ணெய்ப் பிசுபிசுப்பு நீங்கி முகம் பொலிவு பெறும்.
கோடைக்காலத்தில் சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்க கடலை மாவை பயன்படுத்தலாம். கடலை மாவுடன் காய்ச்சியப் பாலை குழைத்து முகத்தில் பூசி, நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பிரகாசமாக இருக்கும்.
மேலும் முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிது தேன், எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவி வந்தால் முகச்சோர்வு நீங்கிவிடும்.
அதேப்போன்று முல்தானி மெட்டியை தண்ணீரில் நன்றாக குழைத்து முகத்தில் தடவி வர, முகம் புத்துணர்வு பெறும்.
வெயில் காலத்தில் சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்க தயிரை முகத்தில் பூசி, பத்து நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க கடலை மாவுடன் ரோஸ்வாட்டர், பால் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
அதே போன்று கடலை மாவுடன் சிறிது எலுமிச்சைச் சாறு, பால், மஞ்சள் தூள் கலந்து முகத்தில் பூசி, மிதமான சுடுநீரில் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
- ஏ.எஸ்.கோவிந்தராஜன்