திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழகம், கவிஞர் கலாப்ரியாவுக்கு இந்த ஆண்டுக்கான ‘மனோன்மணியம் சுந்தரனார் விருது’ அளித்துக் கெளரவித்துள்ளது. கலை, பண்பாடு, இலக்கியம், மொழி ஆகியவற்றில் சிறந்து விளங்கக்கூடிய இலக்கிய ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து 2014 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. முதல்முறையாக 2014 ஆம் ஆண்டில் பேராசிரியர் இளையபெருமாள் மற்றும் சீனி விஸ்வநாதனுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. 2015 ல் தமிழறிஞர் ச.வே. சுப்ரமணியனுக்கும் 2016 ல் கரிசக்காட்டு எழுத்தாளுமை கி.ராஜநாராயணனுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இந்த ஆண்டு இவ்விருது கவிஞர் கலாப்ரியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கலாப்ரியாவின் இயற்பெயர் சோமசுந்தரம். நெல்லை, கடையநல்லூரில் பிறந்த கலாப்ரியா தற்போது இடைக்காலில் வசிக்கிறார். இவரது மனைவி கணித ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கலாப்ரியா, வங்கி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் இதுவரை தமிழக அரசின் கலைமாமணி விருது, ஜெயகாந்தன் விருது, கண்ணதாசன் விருது, திருப்பூர் தமிழ்சங்க விருது, கருணாநிதி பொற்கிழி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். கடந்த புத்தகத் திருவிழாவில் இவர் எழுதிய வேனல் நாவல் பெருவாரியான புத்தக ப்ரியர்களால் ஆர்வத்துடன் வாங்கிச் செல்லப்பட்டது. இன்று நெல்லை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விருதும், ரூபாய் 1 லட்சம் ரொக்கப்பணமும், பட்டயச்சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது.