தற்போதைய செய்திகள்

சிதம்பரம் நகரில் ரூ.40 கோடி செலவில் மாற்றுப்பாதை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

30th Jun 2023 02:04 PM

ADVERTISEMENT

 

சிதம்பரம்: சிதம்பரம் நகர எல்லையிலிருந்து பேருந்து நிலையம் வரை நகருக்குள் வராமல் ரூ.40 கோடி செலவில் தில்லையம்மன் ஓடை சாலையில் மாற்றுப் பாதை அமைக்கப்படும் என தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிதம்பரம் நகரில் நடைபெற்று வரும் ஞானப்பிரகாசர் குளம், குமரன் குளம் தூர்வாரி சீரமைக்கும் பணி, உழவர் சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் காய்கறி மார்க்கெட் கட்டுமான பணி ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். 

அதன் பின்னர்  சிதம்பரம் நகர எல்லையிலிருந்து பேருந்து நிலையம் வரை நகருக்குள் வராமல் ரூ.40 கோடி செலவில் தில்லையம்மன் ஓடை சாலையில் மாற்றுப் பாதை அமைக்கப்பதற்கான வரைபடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

ADVERTISEMENT

அமைச்சருடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அ.அருண்தம்புராஜ், சிதம்பரம் நகரமன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார், உதவி ஆட்சியர் சுவேதாசுமன், வட்டாட்சியர் செல்வக்குமார், நகராட்சி ஆணையாளர் பிரபாகரன், பொறியாளர் மகாராஜன், கடலூர் மாவட்ட நகராட்சி திட்டக்குழு உறுப்பினர் த.ஜேம்ஸ் விஜயராகவன், நகரமன்ற உறுப்பினர்கள் ரா.வெங்கடேசன், அப்பு சந்திரசேகரன், திமுக நிர்வாகி பா.பாலசுப்பிரமணியன், இளங்கோ, ஏஆர்சி.மணிகண்டன், வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, அறிவழகன், மக்கள் அருள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்.

அப்போது, சிதம்பரம் பகுதியில் நடைபெற்று திட்டப்பணிகளை ஆய்வு செய்தேன். சிதம்பரம் நகரில் உள்ள 6 குளங்கள் நகர்ப்புற மேம்பாட்டின் திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி அளவில் தூர்வாரி சீரமைக்கும் கட்டமைப்பு பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் குளங்களை சுற்றி நடைபாதை அமைக்கப்படுகிறது. அதே போல் தண்ணீர் சேகரிக்கவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் இத்திட்டம் செயல்படுத்த படுகிறது. 

அதே போல் சிதம்பரம் நகரத்திற்கு நடராஜர் கோயில், தில்லையம்மன் கோயில் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றிற்கு நாள்தோறும் சுமார் 60 ஆயிரம் பேர் வந்து செல்வதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. 

இதையும் படிக்க | சந்தீப் ராய் ரத்தோர் சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்பு!

சிதம்பரம் நகர எல்லையிலிருந்து பேருந்து நிலையம் வரை நகருக்குள் வராமல் ரூ.40 கோடி செலவில் தில்லையம்மன் ஓடை சாலையில் மாற்றுப் பாதை அமைக்கப்பதற்கான வரைபடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

சிதம்பரம் நகர நெருக்கடியில் சிக்காமல் நோயாளிகள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு குறைந்த நேரத்தில் மருத்துவமனைக்கு செல்வதற்கு மாற்று வழி அமைக்கப்படுகிறது.  இதனை கருத்தில் கொண்டு சிதம்பரம் நகரத்திற்கு மாற்று வழி இரண்டரை கிலோ மீட்டருக்கு தில்லையம்மன் ஓடையில் ரூ.40 கோடிக்கு சாலை அமைத்து தடுப்பு சுவர் அமைக்கப்படவுள்ளது. 

நகர விரிவாக்கத்தின் அடிப்படையில் நகரின் வெளியே மணலூர் லால்புரத்தில் கூடுதலாக ரூ.15 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நகரில் 2 ஆண்டுகளில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட ரூ. 230 கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. 

சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் 15 ஊராட்சிகள் கூட்டு குடிநீர் திட்டத்தில் பயன்பெறும். தற்போது அதற்கான பணி டெண்டர் விடப்பட்டுள்ளது. செப்.15 ஆம் தேதி மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது. அதனை  செயல்படுத்த கூடாத வகையில் ஆளுநர் மூலமாக மத்தியஅரசு இடையூறு செய்து வருகிறது. ஆளுநர் தான்தோன்றிதனமாக நடக்கிறார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல் முதல்வராக உள்ளதால், அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அமைச்சரை நியமிக்கவோ, நீக்கவோ முதல்வருக்கு உண்டான அதிகாரம். ஆளுநர் அந்த அதிகார ஆயுதத்தை எடுக்கும் போது சட்டத்தின் மூலமாக சந்திப்போம். அமைச்சரை நீக்கம் செய்ததற்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவித்தவுடன், ஆளுநர் தற்போது பின் வாங்கிவிட்டார் என்று  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT