கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டியில் சாலையில் நடந்து வந்த இரு பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி சாவடி சந்தில் வசிக்கும் செல்லப்பன் மனைவி ஜெயக்கொடி(45) என்பவரும், அதே ஊரில் அக்ரஹாரம் பகுதியில் வசிக்கும் முத்துக்கண்ணு மனைவி அலமேலு(50) ஆகிய இருவரும் ஆணையாம்பட்டி - வீரகனூர் சாலையில் ஒரு தனியார் பள்ளி அருகே வெள்ளிக்கிழமை நடந்து வந்து கொண்டிருந்தனர்.
மழைக்காக அவர்கள் புளியமரத்தின் அடியில் ஒதுங்கியபோது அவர்களின் மீது மின்னல் தாக்கியது. இதில் அலமேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த ஜெயக்கொடி கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கெங்கவல்லி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.