காங்கயம்: சிவன்மலை முருகன் கோயில் சார்பில் காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் 250 பேருக்கு வெள்ளிக்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களைக் கவனித்துக் கொள்ளும் உறவினர்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள கோயில் நிர்வாகம் சார்பில் மதிய உணவு வழங்க வேண்டும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், சிவன்மலை முருகன் கோயில் சார்பில் அடிவாரத்தில் 100 பொதுமக்களுக்கு மதிய உணவும், காங்கயம் அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள், அவர்கள் உறவினர்கள் என 250 பேருக்குமதிய உணவாக பருப்பு சாத பார்சல் வழங்கப்பட்டது.
இந்த மதிய உணவினை சிவன்மலை கோயில் ஊழியர்கள், கோயிலுக்குச் சொந்தமான பயணிகள் பேருந்தில் எடுத்து வந்து, நோயாளிகளுக்கு வழங்கினர். இந்த மதிய உணவு நோயாளிகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.