தமிழகத்திற்கு உடனடியாக தேவையான ஆக்சிஜனை வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து வெள்ளிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் வெள்ளிக்கிழமை எழுதிய கடிதத்தில் தமிழ்நாட்டிற்கு உடனடியாக 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அடுத்த 2 வாரங்களில் 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழ்நாட்டிற்கு தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்திற்குத் தேவையான ஆக்சிஜனை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய ஆக்சிஜன் திட்டத்தில் 22 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஒதுக்கியது துரதிர்ஷ்டவசமானது என அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மேலும், 476 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பெறுவதற்கான ஆணை பிறப்பிக்கப்படாததால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள முதல்வர் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜனை தமிழகத்திற்கு கொண்டுவர ரயில்களையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.