கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் நெற்பயிரில் பச்சை பாசிகள் நெற்பயிர் வளர்ச்சி தடைபட்டு வரும் நிலையில், பயிர்களில் ஏற்படும் இந்த பாதிப்பை சரி செய்யும் வகையில் வேளாண் துறை அதிகாரிகள், வேளாண் விஞ்ஞானிகள் கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
கும்மிடிப்பூண்டியில் தற்போதைய 2021-2022 சொர்ணவாரி பருவத்தில் 3000 ஹெக்டேர் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கும்மிடிப்பூண்டியில் சில பகுதிகளில் மழை இன்மை காரணமாகவும், கோடைகால தாக்கத்தினால் அதிக வெப்பநிலை காரணமாகவும் தாழ்வான சில பகுதிகளில் மண்ணின் உப்புத் தன்மை அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலத்தில் நெற்பயிர் பயிரிடப்பட்டு, அதற்கு உப்பு நீர் பாய்ச்சப்படும் சூழலில் நெற்பயிர் தூர் பிடிக்காமல் காணப்படுகிறது.
இது குறித்து விவசாயிகள் அளித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி வேளாண் உதவி இயக்குநர் கு.அறிவழகன், நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் விஜயசாந்தி மணிமேகலை, உதவி வேளாண் அலுவலர்கள் அருள்முருகன், ஆனந்தராஜ், துணை வேளாண் அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட குழுவினர் ரெட்டம்பேடு ஊராட்சி குருவியகரம் கிராமத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து நெற்பயிர்களை பார்வையிட்ட விஞ்ஞானிகள் 1 ஏக்கர் நெற்பயிரில் 2 கிலோ காப்பர் சல்பேட்டோடு, 20 கிலோ மணலை கலந்து தெளிக்க ஆலோசனை வழங்கினர். நெற்பயிருக்கு காப்பர் சல்பேட் தெளிப்பதால் நெற்பயிரில் உள்ள பச்சைபாசிகள் கட்டுப்படுத்தப்பட்டு, நெற்பயிரின் வேர் வளர்ச்சிக்கு தேவையான காற்றோட்டத்தையும், ஊட்டச்சத்தையும் தரும், பயிர் வளர்ச்சி தடைபடாது என்றனர்.
நிகழ்வில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.