புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஊழியர்கள், முன் களப்பணியாளர்கள் அனைவரும் ஜூலை 1-ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியதாவது:
புதுச்சேரியில் ஜூன் 16 முதல் தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் மக்கள் அதிகளவில் தடுப்பூசி செலுத்துவதால், தடுப்பூசி திருவிழா 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள், முன் களப்பணியாளர்கள் அனைவரும் ஜூலை 1-ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
கரோனாவில் இருந்து விடுபட்டவர்களுக்கு யோகா சிறந்த மருந்தாக உள்ளது. யோகா கலையை கற்றுக் கொண்டால் எந்த அலை வந்தாலும் சமாளிக்கலாம்.
கரோனா மூன்றாம் அலை தாக்கம் வரும் என கூறப்படுவதால் மக்கள் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்துவதில் தயக்கம் தற்போது குறைந்து வருகிறது என்று கூறினார் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.