பப்ஜி மதனிடம் ஏமாந்து பணத்தை இழந்தவர்கள் புகாரளிக்கலாம் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடி யூடியூப்பில் நேரலை செய்து வந்தவர் பப்ஜி மதன் என அறியப்படும் மதன். இவர் விளையாட்டின் இடையில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி பதிவிட்டு வந்தார்.
பெண்கள் குறித்து ஆபாசமாகவும், அநாகரீகமான முறையில் பேசி வந்த நிலையில் பப்ஜி மதனை கைது செய்ய வேண்டும் என புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்துமத்திய குற்றப்பிரிவு போலீசார் மதனை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பினர். நேரில் ஆஜராகாத பப்ஜி மதன் தலைமறைவானார்.
இதனையடுத்து அவர்மீது சிறுவர்களை தவறாக வழிநடத்தியது, பெண்களை ஆபாசமாக பேசியது, தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், விபிஎன் செர்வரை பயன்படுத்தி தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தர்மபுரியில் மதன் பதுங்கி இருந்த தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று கைது செய்தனர். அப்போது, மதன் போலீசார் காலில் விழுந்து கண்ணீர் விட்டு கெஞ்சியதாக தகவல் வெளியானது.மேலும் மனைவி மற்றும் குழந்தையை விடக்கூறி கெஞ்சியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் விடியோவில் ஆபாசமாக பேசுவதற்காக பணம் கொடுத்து பெண்ணை தயார் செய்ததும் மதனிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
ஆபாச விடியோ மூலம் சம்பாதித்த பணத்தில் 2 சொகுசு கார்கள்,2 சொகுசு பங்களாக்கள் வாங்கியதாகவும், ரூ. 4 கோடி வரை வங்கி கணக்கில் வைத்துள்ளதாகவும் தெரியவந்தது.
இதனையடுத்து பப்ஜி மதன்- கிருத்திகா வங்கி கணக்கை முடக்கிய போலீசார், மதனின் சொகுசு கார்கள் இரண்டையும் பறிமுதல் செய்து காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்துள்ளனர்.
தற்போது தர்மபுரியில் கைது செய்யப்பட்ட மதனை சென்னைக்கு அழைத்து வந்து குற்றப்பிரிவு போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் யூடியூப்பில் சம்பாதித்த பல கோடி ரூபாய்க்கு வருமான வரி செலுத்தாதது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பப்ஜி மதனிடம் ஏமாந்து பணத்தை இழந்தவர்கள் புகாரளிக்கலாம் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பப்ஜி மதனிடம் பணத்தை இழந்தவர்கள் dcpccbi@gmail.com என்ற இணையதள முகவரியில் புகாரளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதனிடம் ஏமாந்தது ரூ.5 ஆயிரமாக இருந்தாலும் புகாரளிக்கலாம் என்று குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.