அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மரப்பட்டறை ஒன்றில் இன்று (சனிக்கிழமை) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள மரச்சாமான்கள் எரிந்து நாசமாயின. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அருப்புக்கோட்டை குப்புசாமி ஆசாரி தெருவில் வசிப்பவர் பாலமுருகன்(50). இவர் இப்பகுதியை அடுத்த நாகலிங்கா நகரில் ஒரு தனியார் இடத்தில் மரத்தாலான ஜன்னலகள், கதவுகள், அலமாறி, மேசை உள்ளிட்டவை செய்து தரும் மரப் பட்டறை வைத்துள்ளார். இன்று (சனிக்கிழமை) வழக்கம் போல் தனது பட்டறைப் பணிகளை முடித்துவிட்டு மதியம் 3 மணிக்கு பட்டறையைப் பூட்டி விட்டு பாலமுருகன் தனது வீட்டிற்குச் சென்று விட்டார்.
ஆனால் மாலை 5.30 மணிக்கு இவரது பட்டறையிலிருந்து கரும்புகையுடன் தீ எரிவதாகத் தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் ஜெயப் பாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் சுமார் பல லட்சம் மதிப்புள்ள மரச்சாமான்கள் எரிந்து நாசமாயின. இவ்விபத்து குறித்து நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.