வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பேளூர் அரசு கரோனா சிகிச்சை மையத்திற்கு, வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை சார்பில் ஆக்ஸிஜன் உருளை, நெபுலைசர், உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
வாழப்பாடி அருகே பேளூரில் வட்டார சுகாதாரத் துறை வாயிலாக, தனியார் பள்ளி வளாகத்தில் கரோனா நலவாழ்வு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, ஆக்ஸிஜன் வழங்குவதற்கு வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை சார்பில், ஆக்ஸிஜன் உருளை, நெபுலைசர், ஆக்ஸிஜன் அளவு காட்டும் கருவி, வெந்நீர் குவளை ஆகிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் முகக் கவசங்கள் ஆகியவை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை தலைவர் பெ.பெரியார்மன்னன், செயலர் ஜவஹர் ஆகியோர் வட்டார மருத்துவ அலுவலர் சி. பொன்னம்பலத்திடம் மருத்துவ உபகரணங்களை ஒப்படைத்தனர்.
இந்நிகழ்வில், சித்த மருத்துவர் லட்சுமணன், துளி. ராஜசேகரன், சாய்விருக்ஷா அறக்கட்டளை கு.கலைஞர்புகழ், வாசவி சங்க நிர்வாகி சாய்ராம், ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக, சுகாதார ஆய்வாளர் செல்வபாபு நன்றி கூறினார்.