கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் செயல்படும் பிர்லா கார்பன் நிறுவனம் சார்பில் கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ. 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் செயல்படும் பிர்லா கார்பன் நிறுவனம் சார்பில் தமிழக அரசின் கரோனா நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவிடம் வழங்கினர். தொடர்ந்து இந்த நிறுவனத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கரோனா தொற்று நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் உள்ளிட்ட ரூ.35 லட்சம் மதிப்பிலான மருத்துவ உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டி அடுத்த ஏடூரில் உள்ள செரியன் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பிர்லா கார்பன் நிறுவன தலைவர் ஜிபினந்தா ஜெனா தலைமை தாங்கினார். இதில் பிர்லா கார்பன் நிறுவன துணை பொது மேலாளர் ராஜன் ஜெகநாதன், மேலாளர் மோகனசுந்தர், நிறுவன மருத்துவ அலுவலர் டாக்டர் கே.வி.எஸ்.ராஜு முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ந.மகேஷ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ், டிஎஸ்பி ரமேஷ் ஆகியோரிடம் பிர்லா கார்பன் நிறுவன தலைவர் ஜிபினந்தா ஜெனா இதய செயல்பாட்டை கண்டறிய பயன்படும் கருவி, மகப்பேறு அறையில் ஏ.சி, கணினி, முககவசம், கிருமிநாசினி, வென்டிலேட்டர், ஆக்சிஜன் அளவு கண்டறியும் கருவி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மருத்துவ உதவி உபகரணங்களை வழங்கினார்.
தொடர்ந்து கும்மிடிப்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் பிர்லா கார்பன் நிறுவனம் மருத்துவ உபகரணங்களை வழங்கியமைக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுளை நிறுவனத்தின் மனித வள அதிகாரி பெர்ணாண்டஸ் உள்ளிட்டோர் முன்னின்று சிறப்பாக நடத்தினர்.