தேனி மாவட்டத்தில் திட்டமிடப்பட்டிருந்த நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்துக்கு அனுமதி அளிக்கத் தமிழக அரசு மறுத்துவிடும் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நியூட்ரினோ திட்டத்தின் உத்தேச கட்டுமானப் பகுதியானது, மதிகெட்டான் சோலை - பெரியாறு புலிகள் புகலிடப் பகுதியில் வருவதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து அனுமதி மறுக்கப்படும் எனத் தெரிகிறது.
தேனி மாவட்டத்தில் போடி மேற்கு மலைத் தொடர் பகுதியில் பெரும் ஒற்றைக் குன்றைத் துளைத்து, சர்ச்சைக்குரிய நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், இந்தத் திட்டத்துக்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் உள்ளூர் மக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
இந்தத் திட்டத்துக்கான அனுமதி, பல்வேறு நிலைகளில் தாமதமாகிவந்த நிலையில் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.
ஆய்வக அனுமதி தொடர்பான டாடா ஆய்வு நிறுவனத்தின் மனு, தற்போது மாநில வனஉயிர்கள் வாரியத்தின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது.
புலிகள் வனப் பகுதியில் இந்தத் திட்டத்தை அனுமதிப்பதில்லை என்ற முடிவைத் தமிழக அரசு எடுக்கும் என்றும் இந்த முடிவு இந்த வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்றும் இந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கேரளத்தில் இடுக்கி மாவட்டத்திலுள்ள மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா சூழல் பாதுகாப்புப் பகுதி பற்றிய வரையறையை, கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய சுற்றுச்சூழல் வனத் துறை அமைச்சகம் வெளியிட்டதும் நியூட்ரினோ திட்டத்துக்கான அனைத்து தடங்கல்களும் அகன்றுவிட்டதாகக் கருதப்பட்டது.
ஏனெனில், இந்த அறிவிக்கைப்படி, கேரள- தமிழக எல்லையில் இருக்கும் இந்தப் பகுதியில் தமிழகப் பக்கமுள்ள பரப்பு, சூழல் பாதுகாப்புப் பகுதியில் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம் நியூட்ரினோ திட்டத்துக்கு வன உயிர்கள் தேசிய வாரியத்திடம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லாமல் போய்விடும்.
ஆனால், மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை மேற்கொண்ட விரிவான ஆய்வில் நியூட்ரினோ திட்டப் பகுதி, மதிகெட்டான் சோலை - பெரியாறு புலிகள் புகலிடப் பகுதியில்தான் வருவதாக அறியப்பட்டுள்ளது.