வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சேஷன்சாவடி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் கிரிக்கெட் மைதானத்தில், சேலம் மாவட்ட அணிக்கு (16 வயதுக்கு உள்பட்டோர்) வீரர்கள் தேர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி சேஷன்சாவடி கிராமத்தில், சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் வாயிலாக, தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது.
இந்த மைதானத்தில், சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 16 வயதுக்கு உள்பட்டோருக்கான சேலம் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட 16 வயதுக்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். காலை 8 மணிக்கு தொடங்கிய வீரர்களுக்கான பெயர் பதிவு, 10 மணி வரை தொடர்ந்தது.
இதனையடுத்து சான்றிதழ்கள் சரிபார்ப்புக்குப் பிறகு, வீரர்களை தேர்வு செய்யும் போட்டிகள் நடைபெற்றது. தகுதி வாய்ந்த வீரர்களை தேர்வு செய்து, சேலம் மாவட்ட அணியில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினர் மற்றும் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் அமைப்பினர் செய்து வருகின்றனர்.
இந்த கிரிக்கெட் வீரர்கள் தேர்வு முகாமை காண, பல்வேறு பகுதிகளில் இருந்து கிரிக்கெட் ஆர்வலர்கள் ஏராளமானோர் கிரிக்கெட் மைதானத்தில் குவிந்தனர்.