புதுச்சேரி: புதுச்சேரி இ.எஸ்.ஐ. மண்டல அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியதாக துணை இயக்குநர் உள்பட இருவரை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரி முதலியார்பேட்டை புவன்கரே வீதியில் தொழிலாளர்களின் அரசு மாநில காப்பீட்டுக் கழகம் (இ.எஸ்.ஐ.) மண்டல அலுவலகம் இயங்கி வருகிறது.
மருத்துவ காப்பீடு எடுக்காத நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளை மிரட்டி இ.எஸ்.ஐ. அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக சென்னை சிபிஐ அலுவலகத்துக்கு புகார்கள் சென்றுள்ளன.
இந்நிலையில் 4 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு புதன்கிழமை பிற்பகலில் இ.எஸ்.ஐ. மண்டல அலுவலகத்தின் முதல் தளத்துக்கு வந்து சோதனை செய்தனர். அச்சமயத்தில், ஒரு தொழிற்சாலை நிறுவனத்திடமிருந்து ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, இருவரிடம் தீவிர விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அவர்களிடமிருந்த பல்வேறு கோப்புகள், கணினிகளையும் சோதனையிட்டனர்.
5.30 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோதனையின் முடிவில், சிபிஐ அதிகாரிகள் லஞ்சம் வாங்கியது தொடர்பாக இ.எஸ்.ஐ. மண்டல துணை இயக்குநர் பெட்ராஸ், சமூக பாதுகாப்பு அலுவலர் மோஹித் ஆகிய இருவரை கைது செய்து, சென்னை அழைத்துச் சென்றனர். மேலும், ஆவணங்கள், தகவல்கள் அடங்கிய கணினி, ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.