ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தனது பிறந்தநாளில், சாலையோர ஆதரவற்ற முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கி, சமூக மாற்றத்திற்கான புதுமையான முறையில் பிறந்தநாள் கொண்டாடிய சிறுவனுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வடகுமரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.கே.விஜயகுமார்(45). திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டு வளர்ச்சித்துறையில் இளநிலை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி அமுதசாந்தி(39). அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதிக்கு மகேசுராம் (10). ஹரீஷ்ராம்(8) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
குடும்பத்தினருடன் உணவை பொட்டலங்கள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள சிறுவன மகேஷ்ராம்.
தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவன் மகேஷ்ராம், தனது 10 ஆவது பிறந்த நாளை, தனது பகுதியிலுள்ள சாலையோர ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிக்கு உதவி, பயனுள்ள வகையில் கொண்டாட விரும்புவதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு இவரது பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தனது வீட்டிலேயே பெற்றோர் மற்றும் உறவினர்கள் உதவியுடன், தயிர் சாதம், எலுமிச்சை, புளி சாதம் ஆகிய கலவை சாதங்களை சுவையாக தயாரித்து, பாக்கட்டில் அடைத்து தனது கிராமத்திலுள்ள சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளைத் தேடிச் சென்று, உணவு பொட்டலங்களை வழங்கினார்.
முகக்கவசம் அணிந்து சாலையோர ஆதரவற்ற முதியவருக்கு உணவு பொட்டலம் சிறுவன் மகேஷ்ராம்.
பிறந்தநாள் என்றாலே புத்தாடை அணிந்து கொண்டு, கேக் வெட்டி உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு கொண்டாட விரும்பும் சிறுவர்களுக்கு மத்தியில், தனது பிறந்தநாளை மற்றவர்களுக்கு பயனுள்ள வகையில், சமூக அக்கறையோடு, சாலையோர ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு தயாரித்து கொடுத்து புதுமையாக முறையில் கொண்டாடிய சிறுவன் மகேஷ்ராமுக்கு, சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
ஆத்தூர் அருகே சாலையோர ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகளளைத் தேடிச் சென்று உணவு வழங்கி பிறந்தநாளை புதுவிதமாக கொண்டாடிய சிறுவன் மகேஷ்ராம்.